வங்காளதேசம், சீனா, இந்தியா, மியான்மார் ஆகிய நாடுகளுக்கிடையேயான பொருளாதார மண்டலப் பணிக் குழுவின் 2ஆவது கூட்டம் 17, 18ஆம் நாட்களில் வங்காளதேசத்தின் கொக்ஸ் பசார் நகரில் நடைபெற்றது. இந்த நான்கு நாடுகளைச் சேர்ந்த பணிக் குழு உறுப்பினர்களும், அரசு வாரியங்கள், ஆய்வு நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் துணைத் தலைமைச் செயலாளர் வாங் யீமிங் பிரதிநிதிக் குழுவுக்குத் தலைமை தாங்கி இக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இந்தப் பொருளாதார மண்டலம் பற்றி நான்கு நாடுகள் தனித்தனியாக அறிக்கையை வழங்கியுள்ளன. இந்த அறிக்கைகளோடு, பரஸ்பர தொடர்பு, எரியாற்றல், முதலீடு, நிதித் திரட்டல், சரக்கு மற்றும் சேவை வர்த்தகம், தொடரவல்ல வளர்ச்சி, வறுமை ஒழிப்பு, மனித வளம், பண்பாட்டுப் பரிமாற்றம் உள்ளிட்ட முக்கிய துறைகளிலான ஒத்துழைப்புக்கான யோசனையும், அமைப்பு முறையின் கட்டுமானமும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளன. சீனா முன்வைத்த முன்கூட்டி அறுவடை எனும் ஆலோசனை இக்கூட்டத்தில் வரவேற்பைப் பெற்றுள்ளது.