ஆடல், நடன அரங்கேற்றம், ஓவியம் மற்றும் பியானொ இசைத்தல் கலைகளில் தேர்ச்சி பெற்றவர், சாவ் சிங் அம்மையார். அவர் சீனாவின் புகழ் பெற்ற அரங்கேற்றக் கலைஞர் சாவ் டானின் மகள் ஆவார்.
சாவ் சிங் அம்மையாருக்கு 4 வயதாக இருந்த போது, ஒரு திடைப்படத்தில் நடித்தார். அவருக்கு 9 வயதாக இருந்த போது, அவர் பியானொ இசைப்பதைக் கற்றுக்கொள்ளத் தொடங்கினார். அவருக்கு 10 வயதாக இருந்த போது, உலகளவில் மிகவும் புகழ் பெற்ற அன்னம் ஏரி (swan lake) என்ற பாலே நடன அரங்கேற்றம் கண்டு களித்த பிறகு பாலே நடனத்தை நேசித்தார். அப்போது முதல் அவர் நடனப் பாதையில் முன்னேறி வருகிறார். சீனாவின் தலைசிறந்த நடன நாடக அரங்கேற்றக் கலைஞராக, சாவ் சிங் அம்மையார் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட 20க்கும் அதிகமான நாடுகளில் பயணம் மேற்கொண்டு, நிகழ்ச்சிகளை அரங்கேற்றியுள்ளார். சீனாவுக்கும் வெளிநாடுகளுக்குமிடை பண்பாட்டுப் பரிமாற்றத்துக்கு அவர் முக்கிய பங்காற்றியுள்ளார். 2012ஆம் ஆண்டு சாவ் சிங் அம்மையாருக்கு "சீனாவின் நடனக் கலை வாழ்நாள் சாதனை விருது" வழங்கப்பட்டது.
இத்தகைய அதிகமான பெருமைகளைப் பெற்றுள்ள போதிலும், கலை மீதான ஆசையை சாவ் சிங் அம்மையார் ஒருபோதும் கைவிடவில்லை. 72 வயது முதல் அவர் தூரிகை எடுத்து, எண்ணெய் ஓவியத்தை வரையத் துவங்கினார். சாவ் சிங் அம்மையார் கூறியதாவது:
"2008ஆம் ஆண்டு ஓவியக் கலையைக் கற்றுக்கொள்ள துவங்கினேன். 2011ஆம் ஆண்டு எனது ஓவியக் கண்காட்சியை நடத்தினேன். இக்கண்காட்சியில் 30க்கு அதிகமான ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன" என்றார் அவர்.