இந்திய தலைமை அமைச்சர் நரேந்திர மோடி மே 14 முதல் 16ஆம் நாள் வரை சீனாவில் பயணம் மேற்கொள்ள உள்ளார். பெய்ஜிங்கைத் தவிர, சீஆன் நகரிலும் ஷாங்காய் மாநகரிலும் அவர் பயணம் மேற்கொள்வார் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங் அம்மையார் 6ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
நரேந்திர மோடி இந்திய தலைமை அமைச்சராகப் பதவியேற்ற பின் சீனாவில் பயணம் மேற்கொள்வது இதுவே முதன்முறை. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், தலைமை அமைச்சர் லீகெச்சியாங், தேசிய மக்கள் பேரவை நிரந்தரக் கமிட்டித் தலைவர் சாங் தேஜியாங் உள்ளிட்ட தலைவர்கள் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இருதரப்புறவு பற்றியும் பொது அக்கறை வாய்ந்த பிரச்சினைகள் குறித்தும் அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள உள்ளனர்.
சீனாவும் இந்தியாவும் உலகில் மிகப் பெரிய வளரும் நாடுகளாகவும் புதிதாக வளர்ந்து வரும் நாடுகளாகவும் திகழ்கின்றன. சீன-இந்திய உறவு நெடுநோக்கு முக்கியத்துவமும் பெரும் செல்வாக்கும் வாய்ந்தது. இப்பயணத்தின் மூலம் இந்தியாவுடன் இணைந்து ஒன்றுக்கொன்று நம்பிக்கையை அதிகரித்து, ஒத்துழைப்பு மற்றும் பரிமாற்றத்தை வலுப்படுத்தி, கூட்டு வளர்ச்சி மற்றும் செழுமையை நனவாக்க சீனா விரும்புகிறது என்று ஹுவா சுன்யிங் கூறினார்.