ஃபூ ஜியன் மாநிலத்தின் தென் கிழக்கில் அமைந்துள்ள ச்சுவான் சோ பண்டைகாலம் தொட்டு சீனாவின் முக்கிய துறைமுகமாக திகழ்ந்து வருகிறது. தாங் வம்சத்தில் உலகின் 4 முக்கிய நுழைவாயில்களில் ஒன்றாக மாறிய அது, கடல் வழி பட்டுப்பாதையின் துவக்கப் புள்ளி என போற்றப்படுகிறது.
தாங் வம்ச கவிஞர் ஒருவர் ச்சுவான் சோ பற்றி இயற்றிய கவிதை ஒன்றில், அப்போது பல்வேறு நாடுகளின் வணிகர்கள் ச்சுவான் சோவில் ஒன்றுகூடி வியாபாரம் செய்த விறுவிறுப்பான காட்சியை வர்ணித்துள்ளார். ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட கண்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வணிகர்கள், சமயப்பரப்புரையாளர்கள், தூதர்கள், பயணிகள் ஆகியோர் இந்த கீழை நாட்டின் பெரிய துறைமுகத்தில் ஒன்றுகூடி, செல்வமடையும் கனவைத் தேடி நனவாக்கி வந்தனர். ச்சுவான் சோ நகரின் ஊக்கமளிக்கும் கம்பீரமான காட்சி இது தான்! ச்சுவான் சோ கடல் போக்குவரத்து அருங்காட்சியகத்தில் கப்பல், மதப் பண்பாடு ஆகியவை தொடர்பான தரவுகளின் மூலம் அப்போதைய சிறப்பான காட்சி பற்றி அறிந்து கொள்ளலாம்.