பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற உள்ள ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய தலைமை அமைச்சர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தில்லியிலிருந்து புறப்பட்டார்.
"பாரிஸுக்குப் புறப்படுகிறேன். இந்த மாநாட்டில், முக்கிய விடயமான சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் குறித்து விவாதிக்க உள்ளோம்" என்று புறப்படும் முன் சுட்டுரையில் மோடி பதிவு செய்திருந்தார்.
இந்த மாநாட்டின்போது, காலநிலை மாற்றத்தைத் தடுப்பதற்காக இந்தியா மேற்கொண்ட வழிகள் மற்றும் இயற்கையுடனான ஒருங்கிணைவு ஆகியவற்றை எடுத்துரைக்கும் இந்திய மேடையை மோடி திறந்து வைக்க உள்ளார்.
மேலும், பிரான்ஸின் அரசுத் தலைவர் பிரான்சுவா ஹொலாந்தேவுடன் இணைந்து சர்வதேச சூரிய ஆற்றல் கூட்டணி எனும் கூட்டத்தை மோடி நடத்த உள்ளார். முன்னதாக, வானொலியில் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், இயற்கை ஆற்றல்களை பாதுகாப்பதுதான், அதிகரித்து வரும் வெப்பத்தைத் தடுக்க முதல்வழியாகும். இது நம் அனைவரின் பங்காகும் என்று குறிப்பிட்டார்.