சர்வதேச புதுப்பிக்கவல்ல எரியாற்றல் அமைப்பின் 7ஆவது ஆண்டுக் கூட்டம் 14ஆம் நாள் ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் துவங்கியது. 150க்கும் அதிகமான நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 75 அமைச்சர் நிலை அலுவலர்கள் உள்ளிட்ட சுமார் ஆயிரம் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
பொருளாதார அதிகரிப்பை விரைவுபடுத்தி, காலநிலை மாற்றத்தைச் சமாளித்து, எரியாற்றலைப் பெறுவதை விரிவாக்கி, உலகின் தொடரவல்ல வளர்ச்சி இலக்கை நனவாக்குவதில் புதுப்பிக்கவல்ல எரியாற்றலின் பங்குகள் பற்றி 2 நாட்கள் நீடிக்கும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படுகின்றது.
சர்வதேச புதுப்பிக்கவல்ல எரியாற்றல் அமைப்பின் பொது செயலாளர் அத்னான் துவக்க விழாவில் பேசுகையில், 2016ஆம் ஆண்டு, புதுப்பிக்கவல்ல எரியாற்றலின் வளர்ச்சிக்கு ஒரு முக்கிய ஆண்டாகும் என்றார். உலகச் சந்தையில் சூரிய மற்றும் காற்று ஆற்றல் மின்சார உற்பத்தியின் செலவு குறைந்துள்ளதால், புதுப்பிக்கவல்ல எரியாற்றலின் போட்டியாற்றல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இதனால் புதுப்பிக்கவல்ல எரியாற்றல், உலகின் பல நாடுகளில் புதிய வடிவ மின்சார உற்பத்திக்கு முதன்மை தெரிவாக மாறியுள்ளது. தவிர, தொடர்புடைய தொழில் நுட்பம் மற்றும் வணிக மாதிரி புத்தாக்கம், முன்பு எரியாற்றல் பெற முடியாத மக்களுக்கு மேலதிக தெரிவுகளை வழங்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.