2017ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 7.2 விழுக்காடு வளரும் என எதிர்பார்ப்பதாக இந்திய நிதி அமைச்சர் அருண் ஜெய்ட்லி புது தில்லியில் கூறியுள்ளார்.
சனிக்கிழமை புதிய வளர்ச்சி வங்கியின் 2ஆவது ஆண்டு கூட்டத்தின் துவக்க விழாவில் உரை நிகழ்த்திய போது அவர் இதைத் தெரிவித்தார்.
புதிய வளர்ச்சி வங்கி என்பது பிரிக்ஸ் நாடுகளால் உருவாக்கப்பட்ட பல தரப்பு வளர்ச்சி வங்கியாகும்.
இந்தியாவின் அடிப்படை வசதிகளின் கட்டுமானம் பற்றி அவர் கூறுகையில், வரும் 5 ஆண்டுகளில் இத்துறையில் 64 ஆயிரத்து 600 கோடி அமெரிக்க டாலர் முதலீடு தேவைப்படுகிறது என்று கூறினார். இதில் சுமார் 70 விழுக்காடு மின்னாற்றல், நெடுஞ்சாலை மற்றும் நகர அடிப்படை வசதிகளின் கட்டுமானத்திற்குப் பயன்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். (வாணி)