அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ஜேம்ஸ் மாட்டிஸ், ஏப்ரல் 24-ஆம் நாள் ஆப்கானிஸ்தானில் பயணம் மேற்கொண்டார். இவ்வாண்டின் ஜனவரி திங்களில் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பதவி ஏற்ற பின் அவர் அந்நாட்டில் பயணம் மேற்கொள்வது இதுவே முதன்முறையாகும்.
ஆப்கானிஸ்தான் அரசுத் தலைவர் மாளிகை அதே நாள் வெளியிட்ட அறிக்கையில், இரு தரப்புறவு, ஆப்கானிஸ்தான் மற்றும் பிரதேசப் பாதுகாப்பு நிலைமை ஆகியவை குறித்து இரு தரப்பும் கருத்துக்களைப் பரிமாற்றி கொண்டன. அதோடு, பயங்கரவாதம், போதைப் பொருள் கடத்தல், ஊழல் ஆகியவற்றைக் கூட்டாக ஒடுக்கும் ஒத்துழைப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் அமெரிக்கா தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அரசுடன் நெருக்கமான ஒத்துழைப்பை நிலைநிறுத்தி, பயங்கரவாதத்தை ஒடுக்குதல் மற்றும் நாட்டின் பாதுகாப்பைப் பேணிக்காப்பதில் ஆப்கானிஸ்தானுக்கு இன்றியமையாத உதவி வழங்கி வருவதாக மாட்டிஸ் தெரிவித்தார்.
தவிர, அன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், ஆப்கானிஸ்தானிலுள்ள தாலிபான் அமைப்பு வெகுவிரைவில் அந்நாட்டின் அமைதி போக்கில் சேர வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார். (தேன்மொழி)