ஏப்ரல் 27ஆம் நாள் வியாழக்கிழமை 19:07 மணிக்கு, சீனாவின் சரக்கு விண்கலமான தியன்சோ-1, விண்ணிலுள்ள சுற்று வட்டப் பாதையில் இயங்கும் தியன்கொங்-2 எனும் ஆய்வு விண்கலத்திற்கு உந்துப் பொருட்களை முதல்முறையாக விநியோகிக்கும் சோதனை வெற்றிகரமாக செய்யப்பட்டது. இத்துடன், தியன்சோ-ஒன்று விண்கலத்தின் பயணம் வெற்றிபெற்றுள்ளது.
இத்தகைய சோதனை மூலமாக, விண்ணில் இயங்கும் விண்கலத்திற்கு எரிபொருட்களை விநியோகிக்கும் தொழில் நுட்பத்தை சீனா பெற்றுள்ளது. உலகில் இந்த முக்கிய தொழில் நுட்பத்தை கொண்ட 3வது நாடாக சீனா விளங்குகிறது.
இந்தப் பயணத்தில், விண்வெளி நிலையத்திற்குப் பொருட்களை ஏற்றிச் செல்வது, விண்ணில் இயங்கும் ஆய்வு விண்கலத்திற்கு எரிபொருட்களை விநியோகிப்பது தொடர்பான முக்கிய தொழில் நுட்பங்கள் சோதிக்கப்பட்டு, முன்னேற்றம் அடைந்துள்ளன. மனிதர்களை ஏற்றிச்செல்லும் விண்வெளிப் பயணத் திட்டத்தின் 2ஆவது கட்டம் வெற்றி பெறுவதையும், சீனாவின் விண்வெளி நிலையத்தின் வளர்ச்சிக் காலம் துவங்குவதையும், இது குறிக்கிறது.