ஆப்கானிஸ்தான் அரசு எதிர்ப்பு படை தேசிய அமைதி போக்கில் சேர வேண்டும் என்று அரசு எதிர்ப்பு படையான ]இஸ்லாமிய கட்சியின் தலைவர் குல்புத்தீன் ஹேக்மட்யார் 29ஆம் நாள் லக்மான் மாநிலத்தில் தெரிவித்தார்.
கடந்த 20 ஆண்டுகளாக அவர் வெளிநாட்டில் வசித்து வந்தார். அண்மையில் ஆப்கானிஸ்தானுக்கு திரும்பிய அவர் முதல்முறையாக வெளிப்படையாக உரையாற்றுவது இதுவாகும்.
நீண்டகாலமாக நீடிக்கும் போரினால், ஆப்கானிஸ்தான் மக்கள் சலிப்புற்றுள்ளனர். எனவே, அமைதியான நல்ல வாழ்க்கையை மக்களுக்கு வழங்க வேண்டும். வெளிப்புற சக்திகளால் ஆப்கானிஸ்தானுக்கு அமைதியை வழங்க முடியாது. அதோடு, ஆப்கான் உள் விவகாரத்தில் தலையிடும் உரிமையும் அவர்களுக்கு இல்லை. வரலாற்றில் இருந்து படிப்பினையைப் பெற வேண்டும் என்று குல்புத்தீன் கூறினார்.
தலிபான் ஆயுதப் படையையும், ஐ.எஸ் தீவிரவாத அமைப்பையும் அடுத்து, ஆப்கானிஸ்தானின் 3ஆவது மாபெரும் ஆயுதப் படை இஸ்லாமிய கட்சியாகும். கடந்த செப்டம்பர் திங்கள், ஆப்கானிஸ்தான் அரசும் இஸ்லாமிய கட்சியும் அமைதி உடன்படிக்கையில் கையொப்பமிட்டுள்ளன. அரசு எதிர்ப்பு படைக்கும் புதிய அரசுக்குமிடையிலான முதல் அமைதி உடன்படிக்கை இதுவாகும்.(மோகன்)