இந்தியாவின் பல பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. அசாம், மேகாலயம், மிசோரம், திரிபுரா, நாகாலாந்து, மணிப்பூர் ஆகிய மாநிலங்களிலும், ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வங்கதேசத்தின் தென்கிழக்கில் ஏற்பட்ட காற்றழுத்தம் காரணமாக மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால், ஒடிசா மற்றும் மேற்கு வங்க மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.