நேபாளம்-சீனா கூட்டு முயற்சி நிறுவனமான ஹொங்ஷு-சிவம் சிமெண்ட் தனியார் நிறுவனம், 2018 மார்ச்சில் இருந்து சிமெண்ட் உற்பத்திப் பணியை தொடங்கும் என்று இந்நிறுவனத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
நிறுவனத்தின் இயக்குநர் சிவ ரத்னா ஷாரதா, சின்ஹுவா செய்தி நிறுவனத்துக்கு திங்கள்கிழமை அளித்த பேட்டியில், நிறுவனத்தின் கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டு மார்ச்சிலிருந்து உற்பத்திப் பணி தொடங்கும் என்று நம்புகிறோம் எனத் தெரிவித்தார். இந்நிறுவனம் சிமெண்ட் உற்பத்தியைத் தொடங்கும் பட்சத்தில், நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் டன் அளவு உற்பத்தி செய்து, நேபாளத்திலேயே அதிக அளவு சிமெண்ட் உற்பத்தி செய்யும் நிறுவனமாகத் திகழும்.
நேபாளத்தின் தென்மேற்கு மாவட்டமான நாவல்பரசியில் சிமெண்ட் தொழிற்சாலை கட்டப்பட்டு வருகின்றது. உற்பத்திக்குப் பின், முதல்கட்டமாக, உள்ளூர் சந்தையில் கால்பதிக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
சில ஆண்டுகளுக்குப் பின், நாள் ஒன்றுக்கு 12 ஆயிரம் டன்னாக தொழிற்சாலையின் உற்பத்தி அளவை அதிகரித்தபின், இந்தியா, சீனா உள்ளிட்ட பிற நாடுகளுக்கு சிமெண்ட் ஏற்றுமதி செய்யவும் திட்டமிட்டுள்ளதாக நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.