சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கும், அமெரிக்க அரசுத் தலைவர் டொனால்டு டிரம்பும் உள்ளூர் நேரப்படி 6ஆம் நாள், அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள மார்-எ-லாகோ ஓய்வு விடுதியில் சந்தித்துப் பேச்சுவாத்தை நடத்தினர். இதில், சீன-அமெரிக்க உறவில் காணப்பட்டுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முன்னேற்றங்களை உயர்வாக பாராட்டியதோடு, புதிய துவக்க நிலையில் இரு நாட்டுறவை மேலும் வளர்ப்பது எனவும் இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
பேச்சுவார்த்தையில் ஷிச்சின்பிங் பேசுகையில்
அழைப்பின் பெயரில் அமெரிக்காவிற்கு வந்து இப்பேச்சுவார்த்தை நடத்துவதில் மகிழ்ச்சியடைகின்றேன். அரசுத் தலைவர் டிரம்புடன் இணைந்து சீன-அமெரிக்க உறவு பற்றியும் சர்வதேச மற்றும் பிரதேச விவகாரங்கள் பற்றியும் ஆழமாக கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டு மேலதிக பொதுக் கருத்துகளை எட்டி, புதிய காலத்தில் சீன-அமெரிக்க உறவு வளர்வதற்கு வழிகாட்ட விரும்புவதாக கூறினார்.
சீன-அமெரிக்க உறவு சீராகி வருவது, இரு நாடுகள் மற்றும் இரு நாட்டு மக்களுக்கு மட்டுமல்லாமல், உலகிற்கும் நன்மையை கொண்டு வருவதாக உள்ளது. அனைவரின் நன்மைக்காக சீன-அமெரிக்க உறவை நன்றாக வளர்க்கின்றோம். சீன-அமெரிக்க உறவைப் பாதிக்கும் காரணம் ஏதும் இல்லை என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.
ஒத்துழைப்பு, சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான ஒரேயொரு சரியான தேர்வு என்றும், இரு நாடுகள் நல்ல ஒத்துழைப்புக் கூட்டாளியாக மாற முடியும் என்றும் ஷிச்சின்பிங் சுட்டிக்காட்டினார். இரு நாடுகள் ஒத்துழைப்பு அளவை விரிவாக்கி, இரு தரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் துறையில் சீரான வளர்ச்சியை முன்னெடுத்து, அடிப்படை வசதிக் கட்டுமானம், எரியாற்றல் உள்ளிட்ட துறைகளில் நடைமுறைக்கு ஏற்ற ஒத்துழைப்பு மேற்கொள்வதை ஆய்வு செய்ய வேண்டும் என்றார் அவர்.
இவ்வாண்டுக்குள் அரசுத் தலைவர் டிரம்ப் சீனாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளுமாறு ஷிச்சின்பிங் பேச்சுவார்த்தையில் அழைப்பு விடுத்தார்.
இந்த பயண அழைப்பை ஏற்றுள்ள டிரம்ப், வெகு விரைவில் சீனாவில் பயணம் செய்வதை எதிர்பார்க்கிறோம் என்றார்.