இந்நாளைய வட ஹெனான் அந்நாளைய வெய் நாட்டின் ஹெ என்ற வட்டத்தின் ஆளுனராக ஷிமென் பாவ் நியமிக்கப்பட்டார். ஹெவுக்கு வந்து சேர்ந்தது, நகரத்தின் மூத்தோரை வரவழைத்து ஹெ வட்டத்தை பற்றியும், மக்களை பற்றியும் விசாரித்தார் ஷிமென் பாவ். அப்போது மூத்தோர் பெருமக்கள் ஹெ வட்டத்து மக்களின் துன்ப நிலைக்கு காரணமாக அமைந்த ஆற்றுக்கடவுளின் திருமணம் பற்றி கூறினர். பல ஆண்டுகளாக ஷாங் ஆற்றின் வெள்ளப்பெருக்கால் ஹெ வட்டத்து மக்கள் பெரும் துன்பங்களை எதிர்கொண்டு வந்தனர். உள்ளூர் சூனியக்காரிகள் இந்த வெள்ளப்பெருக்குகளுக்கு ஆற்றுக்கடவுளே காரணம் என்று கூறி வந்தனர். இந்த வெள்ளங்களின் தீவிரத்திலிருந்து தப்பிக்க வேண்டுமெனில் ஒவ்வொரு ஆண்டும் ஆற்றுக்கடவுளுக்கு அழகான ஓர் இளம்பெண்ணை அன்பளிப்பாக தரவேண்டும் என்று பரிகாரம் சொன்னார்கள் சூனியக்காரிகள். ஆக, மக்களும் இதை நம்பிவிட, ஒவ்வோர் ஆண்டும் இந்த சூனியக்காரிகள் வீடு வீடாகச் சென்று அழகான இளம்பெண்ணை தேடி, தேர்வு செய்தனர். அழகான இளம்பெண்ணை கண்டுவிட்டால், அந்த பெண்ணையே ஆற்றுக்கடவுளின் அன்பளிப்பாக, மணப்பெண்ணாக இந்த சூனியக்காரிகள் தேர்ந்தெடுத்தனர். ஆமாம் ஆற்றுக்கடவுளின் மணப்பெண்ணாகவே அந்த இளம்பெண் கருதப்பட்டாள். மட்டுமல்லாது, ஆற்றுக்கடவுளின் மணப்பெண்ணை தேர்வு செய்தால் மட்டும் போதுமா? திருமணம் செய்யவேண்டாமோ? அந்த திருமணம் செய்யவும் ஆகும் செலவை, மக்கள் தலையிலேயே வைத்தனர் ஹெ வட்டத்து அதிகாரிகள். ஒருபக்கம் சூனியக்காரிகள் அழகான பெண்ணை தேடி வீடு வீடாக சென்றால், ஆற்றுக்கடவுளின் திருமணத்துக்கு செலவு செய்ய பணம் கேட்டு,
அதிகாரிகளும் வீடு வீடாகச் சென்றனர். ஆக இப்படி பல ஆயிரம் வெள்ளிக்காசுகளை திருமணத்துக்காக திரட்டும் அதிகாரிகள், பெரும்பாலும் இரண்டு அல்லது முன்னூறு வெள்ளிக்காசுகளை மட்டுமே செலவழித்தனராம். எஞ்சியது, அவர்களுக்கு சொந்தமானது. இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் சூனியக்காரிகளின் கண்ணில் படும் அழகான இளம்பெண் வசதி படைத்த, செல்வந்த குடும்பத்தைச் சேர்ந்தவள் என்றால், கொஞ்சம் அதிகமாக அவளது குடும்பம் கொடையளிக்க, அவள் தப்பித்துக்கொள்ளலாம். வசதியற்ற குடும்பம் என்றால், தேர்ந்தெடுக்கப்பட்டதும் தங்களது பெண்ணை, சூனியக்காரிகளிடம் ஒப்படைத்தாக வேண்டும். திருமணத்து முன்பாக குளித்து முடித்து, பட்டாடை அணிந்து, சிறப்பாக தாரிக்கப்பட்ட திருமண படுக்கையில் அமர்ந்துகொள்ள வேண்டும். ஆற்றுக்கடவுளுக்கு அன்பளிப்பாக வழங்கப்படுவதற்கு முன் சில நாட்கள் உணவு உட்கொள்ளாது பட்டினியாக இருக்கவேண்டும். குறிப்பிட்ட திருமண நாள் வந்ததும், இந்த அழகி ஆற்றுக்கடவுளுக்கான வரதட்சனையோடு திருமண படுக்கையிலிருந்த வண்ணம் ஆற்றில் இறக்கப்படுவாள். அதாவது அவள் கீழே ஆற்றுக்கடவுளை போய் சேர்வாளாம்.
ஆக இப்படியான முடப்பழக்கம் பல ஆண்டுகளாக தொடர்ந்தது என்பதையும், உள்ளூர் மக்கள், தங்கள் பெண் குழந்தைகளை காப்பாற்றிக்கொள்ளவும், வசூலிப்பு மூலமான கொள்ளையடிப்பிலிருந்து தப்பிக்கவுமாக, ஹெ வட்டத்தை விட்டு வெளியேற விரும்பினர் என்பதையும் புதிய ஆளுனர் ஷிமென் பாவ் அறிந்துகொண்டார். ஆக ஒரு காலத்தில் உயிராற்றல் நிறைந்த ஊராக இருந்து இன்று களையிழந்து சோகம் முகம் பூசிய ஊராக ஹெவை மாற்றிய அந்த ஆற்றுக்கடவுள் திருமண விழாவை தானும் காண்பது என்று முடிவெடுத்தார் ஷிமென் பாவ். விசாரித்தபோது, விரைவில் அந்த ஆண்டின் ஆற்றுக்கடவுளுக்கான அன்பளிப்பு, அழகிய மணப்பெண்ணும் திருமணமும் அரங்கேறப் போகிறது என்று அறிந்து, குறிப்பிட்ட அந்த நாளில், தன் அதிகாரிகள் புடைசூழ, ஷாங் ஆற்றின் கரைக்கு சென்றார். அங்கே சூனியக்காரிகள் கூட்டமொன்று ஒரு அழகிய பெண்ணை அலங்கரித்து, திருமண படுக்கையில் அமர வைத்து பாதுகாப்பாக அவளை சுற்றி நின்றிருந்தது. அதிகாரிகள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு, இந்த ஆற்றுக்கடவுள் திருமண சடங்கை காண காத்திருந்தனர்.
|