அடுத்ததாக, நம்பிக்கை தரும் செய்தி ஒன்று. 21 ஆம் நூற்றாண்டிலும் குணப்படுத்த சரியான மருந்து கண்டறியாத உயிர்கொல்லி நோயாக உலகளவில் அனைவரையும் எயிட்ஸ் நோய் பீதியடைய வைத்துள்ளது. இது உருவாகலாம் என்பதை மிகவும் முன்னதாக அறியவந்து சிகிச்சை அளித்தால் குணமாக்க வாய்ப்புள்ளதை உறுதிப்படுத்தும் இரண்டாவது சான்று பதிவாகியுள்ளது. எயிட்ஸூக்கு இட்டுச்செல்லும் ஹச்ஐவி நச்சுயிரியுடன் பிறந்த குழந்தைக்கு, பிறந்தவுடன் சிகிச்சை அளித்தால் நலமாக்கிவிட முடியும் என்று அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் கலபோர்னியா மாநிலத்தில் பிறந்த குழந்தைக்கு ஹச்ஐவி நச்சுயிரி இருப்பதை அறிந்து, அது பிறந்த நான்கு மணிநேரத்தில் மருந்து வழங்கப்பட்டுள்ளது. இப்போது ஒன்பது மாதங்களாகியுள்ள அந்த குழந்தையின் இரத்தத்திலும், திசுவிலும் ஹச்ஐவி நச்சுயிரி தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது.