7 நாள் பயணத்தில் 5ஆம் நாளான 27ஆம் தேதி, ஷான்சியின் இரண்டாவது பெரிய நகரான பாவ் ஜியில் உள்ள அரசு நிறுவனமான டைட்டானிய உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் இவர்கள் பயணம் மேற்கொண்டனர். பத்திரிகையாளர்களை இன்முகத்துடன் வரவேற்ற ஷெங் ச்சி, தொழிற்சாலையின் பணிகள் மற்றும் இலக்கு குறித்து அறிமுகப்படுத்தினார். அவர் கூறியதாவது: சீனாவில் உள்ள மிகப்பெரிய டைட்டானியம் தொழிற்சாலை இதுவாகும். 1965இல் இத்தொழிற்சாலை தொடங்கப்பட்டது. இங்கிருந்து தயாரிக்கப்படும் டைட்டானிய பொருள்கள், ஆகாய விமானம். விண்வெளித்துறை, கடலடி ஆய்வு, வேதியியல் தொழிற்சாலை, மருத்துவத்துறை உள்ளிட்டவற்றுக்குப் பயன்படுத்தப்படுகிறது. டைட்டானியம் உற்பத்திப் பொருள்கள், ஆய்வு உள்ளிட்டவை எங்களின் முக்கியப் பணிகளாகும். தவிரவும் அணுக்கரு உலைக்கும் டைட்டானிய சாதனங்களை அளித்து வருகிறோம். சீன விண்வெளி ஆய்வுத்துறைக்கான பெரும்பாலான டைட்டானிய பொருள்களையும் நாங்கள் தான் அனுப்பி வருகிறோம். சமீபத்தில் டைட்டானிய பொருள்களின் விலை அதிகரித்துள்ளதால் உள்நாட்டுத் தேவையும் அதிகரித்துள்ளது என்று தெரிவித்தார். மேலும், சர்வதேச அளவில் சிறப்பான பணிகள் மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றுக்காக தேசிய அளவில் பல விருதுகளை தொழிற்சாலை வென்றுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார். லாபம் குறித்து பேசுகையில், இவ்வாண்டின் எங்கள் லாப இலக்கு 20 பில்லியன் யுவானாகும் எனக் குறிப்பிட்டார். இதனைத்தொடர்ந்து, தொழிற்சாலைக்குள் அழைத்துச் செல்லப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு அதன் செயல்பாடுகள் மற்றும் உற்பத்தி குறித்து அறிமுகம் செய்யப்பட்டது.