இந்த பஞ்சபூதங்களான ஐந்து மூலகங்களும் தீய ஆவிகளை விரட்டும் திறன் பெற்றவை என்று தாவோ தத்துவம் கூறுகிறது. இதனால் 1368 முதல் 1644 வரை ஆண்ட மிங் வம்சப் பேரரசர்களும், 1644 முதல் 1911 வரை ஆண்ட சிங்வம்சப் பேரரசர்களும் தங்களது தலைநகரங்களைப் பாதுகாக்க பஞ்சபூதங்களைப் பயன்படுத்தினார்கள். பெய்ச்சிங் நகரில், மரத்துடன் தொடர்புடைய கிழக்குத் திசையில், குவாங்ச்சுமென் நகரச்சுவருக்கு வெளியே அரச குல மர அறுவை ஆலை இருந்தது. அரண்மனைகளைக் கட்டுவதற்குத் தேவையான மரப்பலகைகள் அங்கே தயாரிக்கப்பட்டனவாம். இந்த மரப்பலகைகளுக்கு இயற்கை கடந்த அதீதப் பண்புகள் இருந்ததாக நம்பப்பட்டது. 23 மீட்டர் நீளமும், 2 மீட்டர் விட்டமும் கொண்ட பெரிய பெரிய மரப் பலகைகள் அந்த ஆலையில் வெட்டப்பட்டன. 1758இல் சியான்லாங் பேரரசர் புனித மரப்பலகையின் பாடலை இயற்றினார். அந்தப் பாடலை கல்வெட்டில் பொறித்து, அதை நிறுவ ஒரு அரங்கு கட்டும்படியும் அவர் ஆணையிட்டார்.
பெய்ச்சிங் நகரில், நெருப்புடன் தொடர்புடைய தென்திசையில், யோங்திங்மன் அருகே ஒரு புகைக்குன்று உள்ளது. போர்க்காலத்தின் போது எச்சரிப்பதற்காக தீயை மூட்டுவதற்கு அந்தக் குன்று ஒரு கோபுரம் போல பயன்பட்டது. 1271 முதல் 1368 வரை ஆட்சி செய்த யுவான் வம்சகாலத்தில் இந்த கோபுரம் கட்டப்பட்டது. அப்போது பெய்ச்சிங் நகருக்கு Dadu என்று பெயர் இருந்தது. சிங் வமிச காலத்தில் அந்தக் கோபுரம் திரும்பக் கட்டப்பட்டது பிறகு மிங் வமிசம் பிரமிடு போல கட்டி விட்டது. 1900 வரை சிங் வமிசப் பேரரசர்கள் நெருப்பு மற்றும் நீர்த் தேவதைகளுக்கு அந்தக் கோபுரத்தில் பலியிடும் சடங்கு நடத்தினார்கள்.
உலோகத்தின் திசையான மேற்கில் உலோகத்தினால் செய்யப்பட்ட பெரிய மணி கட்டப்பட்ட ஜுவே ஷெங் ஆலயம் உள்ளது. அந்த மணி 1403 முதல் 1424 வரை ஆட்சி செய்த சூ தி பேரரசரால் வார்க்கப்பட்டது. சீன தேசத்தின் தலைநகரை நாஞ்சிங்கில் இருந்து பெய்ச்சிங்கிற்கு மாற்றிய மன்னரின் அறிவுக்கும் ஆற்றலுக்கும் ஒரு சின்னமாக இந்த மணி கருதப்படுகிறது. இந்த மணியின் உயரம் 5.6 மீட்டர். விட்டம் 3.3 மீட்டர். எடை 46 டன். இந்த மணியின் உள்புறத்திலும், வெளிப்புறத்திலும் இரண்டு லட்சத்து முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட எழுத்துக்களுடன் கூடிய 100 பெளத்த மறைகள் பொறிக்கப்பட்டுள்ளன.
முதலில் இந்த பிரம்மாண்டமான மணி Beihai (பெய் ஹாய்) பூங்காவில் தான் வைக்கப்பட்டிருந்தது. பின்னர் வான்ஷோ கோயிலுக்கு மாற்றப்பட்டு, கடைசியில் இப்போதைய Jueshang கோயிலில் வைக்கப்பட்டது. இந்தக் கோயில் இப்போது பண்டைக் கால மணிகளின் அருங்காட்சியகமாக மாறி விட்டது.
தண்ணீரின் திசையான வடக்கே பெய்ச்சிங் நகரின் கோடை மாளிகையில் குன்மிங் ஏரி உள்ளது.
மண் புவியின் மையத்தில் இருப்பது. ஆகவே பெய்ச்சிங் நகரின் மையப் பகுதியில் பார்பிடன் நகருக்குப் பின்னால் ஜிங்ஷான் என்னும் மலை இருக்கிறது. 1279 முதல் 1368 வரை ஆண்ட யுவான் வம்ச காலத்தில் இது ஒரு சிறிய குன்றாக இருந்தது. அதன் மீது யான்ச்சுன் கோபுரம் கட்டப்பட்டது. பார்பிடன் நகர் கட்டப்பட்ட போது, அதைச் சுற்றிலும் அகழிகளை உருவாக்குவதற்காக தோண்டி எடுக்கப்பட்ட மண், மலை போல குவிக்கப்பட்டு, வான்ஷோ மலை எனப் பெயரிடப்பட்டது. பழைய யுவான் வமிச கோபுரத்தின் மீது மண்ணைக் கொட்டிக் குவித்ததை, முந்தைய வம்சத்தை புதைத்தது போல என்று மிங் மன்னர்கள் கருதினார்கள். கடைசியில், 1644இல் மிங் வமிசத்தின் கடைசிப் பேரரசரான சோங் சென் (Chong Zhen) வான்ஷோ மவையடிவாரத்தில் ஒருமரத்தில் தூக்குப் போட்டுத்தற்கொலை செய்து கொண்டார். 11 ஆண்டுகள் கழித்து அந்த மலையின் பெயரை ஜிங்ஷாங் மலை என்று சிங் வமிச மன்னர் மாற்றினார். இந்த மலையில் ஏறிப் பார்த்தால் பெய்ச்சிங் நகர் முழுவதையுமே பார்க்கலாம்.
|