மதிய வேளையில் நாற்காலியில் அமர்ந்தபடி 10 அல்லது 15 நிமிடம் தூங்குகின்ற அலுவலக பணியாளர்கள் பலர் உண்டு. அத்தகைய குட்டித் தூக்கத்திற்கு பின்னர், மிகுந்த உத்வேகத்தோடு தங்கள் பணிகளை செய்ய முடிவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். நவம்பர் 25 ஆம் நாள் உலக சியஸ்டா நாள், அதாவது உலக 'குட்டி' தூக்க நாளாக கொண்டாடப்படுகிறது. சியஸ்டா என்றால் இலத்தீன் மொழியில் குட்டி தூக்கம் என்று பொருள். 'ஹோரா செக்ஸ்டா' என்ற இலத்தீன் சொல் தான் சியஸ்டா என வழங்கப்படுகிறது. சியஸ்டா என்றால் ஆறாவது மணி என்ற பொருளும் உண்டு. அதாவது, சூரியன் உதித்த பின்னர் 6 வது மணி நேரத்தில் பொதுவாக எல்லோருக்கும் தூக்கம் வரும் என்பதை குறிப்பதாகவும் இதை கொள்ளலாம். இதை அன்றாட வாழ்க்ககையில் பகல் தூக்கம் என்கிறோம். பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் நாடுகளில், உடல் வேகமாக சோர்வடைகிறது. அந்த வேளையில் குட்டித் தூக்கம் போடுவது நல்லது தான் என்று பல ஆய்வுகளும் பரிந்துரைக்கின்றன.
குறைவான மற்றும் தடைப்பட்ட துக்கம் நிவனவாற்றலை கடுமையாக பாதிக்கிறது என்று புதிய ஆய்வுகள் கூறுகின்ற அதேவேளையில், குட்டித் தூக்கம் நினைவாற்றலை அதிகமாக பெருக்குவதோடு, படைப்பாற்றல் மிக்கவர்களாக நம்மை மாற்றுவதாக அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஒரு நாளில் 7 முதல் 8 மணிநேரம் வரை தொடர்ந்து தூங்க வேண்டுமென பரிந்துரை செய்யப்படுகிறது. ஆனால் இவ்வாறு நீண்ட நேர தூக்கம் பெறுபவர்கள் மிகவும் குறைவு. சரியான தூக்கம் இல்லாமல் இருப்பது சிற்றுந்து மோதல்களுக்கு மட்டுமல்ல, எல்லா வகையான விபத்துகளுக்கும் காரணமாக அமைகிறது. தொடர்ந்து குறைவான நேரம் தூங்குபவர்களாக நாம் இருந்தால் இதய, நீரிழிவு மற்றும் பிற நோய்களுக்கு இட்டு செல்லும். வயது முதிர்கின்றபோது வருகின்ற தூக்கமில்லாமை, மூச்சு விட துன்பப்படுவது ஆகிய நோய்கள் அவர்களின் உடல்நல நிலைமையை இன்னும் நெருக்கடிக்கு உள்ளாக்குகின்றது.
|