பொண்ணுக்கு செவ்வாய் தோஷம். செவ்வாய் தோடிம் இருக்கற மாப்பிள்ளையா பாக்கிறது நல்லது என்று சொல்லி முடித்தார் ஜோசியர்.
அதுக்கு இனி செவ்வாய் கிரகத்துக்குத்தான் கோகணும் என்று சலித்துக் கொ1ண்டார் ஜாதகக் கட்டுகளை சுமந்து சுமந்து அலுத்துப் போன பெண்ணின் தந்தை.
அவர் கவலைப்படத் தேவையில்லை. அடுத்த 30 ஆண்டுகளுக்குள் செவ்வாய் கோளுக்கு ஆளை அனுப்பப் போவதாக அமெரிக்க அதிபர் புஷ் கூறியிருக்கிறார். அதற்கு முன்னேற்பாடாக அடுத்த பத்தாண்டுகளுக்குள் செவ்வாய் கோளில் ரோபோ மனித எந்திரத்தைக் கொண்டு போய் இறக்கவும் செவ்வாய்க் கோளை வலம்வர செயற்கைக் கோளை அனுப்பவும், அமெரிக்காவின் நாசா விண்வெளி அமைப்பும், ஐரோப்பிய விண்வெளி அமைப்பும் திட்டமிட்டுள்ளன.
அது சரி, ஆனால் செவ்வாய்க் கோள் மனிதன் வசிப்பதற்கு ஏற்ற இடம் தானா?அல்லது அங்கேயும் சென்னை நகரைப் போல தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுமா?அந்தக் கவலை வேண்டாம் என்கிறார் அமெரிக்க விஞ்ஞாணி மேரி பெளர்க். அண்மையில் டப்ளின் நகரில் பிரிட்டிஷ் சங்கத்தின் அறிவியல் விழாவில் பேசிய அவர் மக்களின் இந்த சந்தேகத்தை நீக்கக் கூடிய சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
சூரியக் குடும்பத்திலேயே மிகப் பெரிய மணல் திட்டுக்கள் செவ்வாய்க் கோளில் உள்ளன. இவற்றில் 50 விழுக்காடு வரை பனியும் உறைபனியும் கலந்திருக்கலாம் என்கிறார். செவ்வாய்க் கோளில் எப்போதாவது உயிரினங்கள் வசித்தனவா? செவ்வாய் கோளின் மண்ணுக்கு அடியில் இன்னமும் சில நுண்ணியிரிகள் புதைந்திருக்கக் கூடுமா? என்ற கேள்விகளுக்கும் விடைகாணத் துடிக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
ஏனென்றால் செவ்வாய் கோள் முழுவதும் மணல் திட்டுக்கள் நிரம்பியுள்ளன. செவ்வாய் கோளில் மனிதன் காலடி எடுத்துவைத்ததும் அருகில் தென்படக் கூடிய ஒரு மணல் திட்டுக்குப் போய் அதைத் தோண்டினால் தண்ணீர் கிடைக்கக் கூடும் என்று கூறும் மேரி பெளர்க் செவவாய் கோளின் வட துருவத்தில் உள்ள மணல்கடல் மற்றும் தென்பகுதியின் மணல் திட்டுப் பள்ளம் ஆகியவற்றின் செயற்கைக் கோள் படங்களை ஒப்பிட்டு ஆராய்ச்சி செய்திருக்கிறார். இவற்றின் புவியியல் தன்மைகளை ஆராய்ந்ததில் தண்ணீரினால் கெட்டிப் பட்டவைதான் இந்த இரண்டு மணல் திட்டுக்கள் என்ற முடிவுக்கு வந்திருக்கின்றார்.
1 2
|