கடந்த செப்டம்பர் 23ஆம் தேதியன்று வெள்ளிக்கிழமை பாய் பெங் லி என்ற முதியவர் சீனாவில் இறந்து போனார். அவருக்கு வயது 93. முதுமையில் ஒருவர் மரணமடைவது இயற்கை தானே! இது என்ன பெரிய செய்தி என்கிறீர்களா? அவர் சாதாரண மனிதர் அல்ல. சீனாவின் இதயத்தைத் தொட்டவர் என்று CCTVயால் அங்கீகரிக்கப்பட்டவர். இறந்து போன பாய் பெங் லி படிப்பறிவில்லாதவர். தனது வாழ்நாள் முழுவதும் டியான்ஜின் (Tian Jin) நகரத் தெருக்களில் மோத்தி எனப்படும் மூன்றுசக்கர சைக்கிள் ரிக்ஷா ஓட்டி, பயணிகளைக் கொண்டு சேர்த்து சம்பாதித்தார். 18 ஆண்டுகளில் இவர் சுமார் மூன்றரை லட்சம் யுவான் நன்கொடையாக வழங்கியுள்ளார். படிப்பறிவு இல்லாத பாய் பெங் லி கல்வியின் சிறப்பை உணர்ந்திருந்தார். அதனாலேயே தான் சம்பாதித்த பணத்தில் பெரும்பகுதியை ஏழை மாணவர்களின் படிப்புதவிக்காக அள்ளித்தந்தார். இவரிடம் உதவி பெற்று சுமார் 300 ஏழை மாணவர்கள் பள்ளிப் படிப்பை முடித்திருக்கின்றனர்.
மழைக்குக்கூட பள்ளிக் கூடத்தில் ஒதுங்காக பாய் பெங் லிக்கு எப்படி கல்விகற்கும் மாணவர்களுக்கு உதவ வேண்டும் எனத் தோன்றியது? 1986இல் ஹெபெய் மாநிலத்தில் உள்ள சொந்த ஊருக்குத் திரும்பி, கடைசிக் காலத்தில் நிம்மதியாக வாழத்தீர்மானித்தார். ஊருக்குப் போனபோது அங்கு சில மாணவர்கள் பணம் இல்லாததால் பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டார்கள் என்று கேள்விப்பட்டு, அதிர்ச்சி அடைந்தார். உடனே தனது ஓய்வுக்கால வாழ்க்கைக்காக கையில் வைத்திருந்த 5000 யுவானை கிராமத்துப் பள்ளிக்கு நன்கொடையாகக் கொடுத்து விட்டு, டியான்ஜினுக்குத் திரும்பி விட்டார்-மீண்டும் ரிக்ஷா ஓட்டி சம்பாதிப்பதற்காக! டியான்ஜின் நகரில் புறநகர்ப்பகுதியில் ஒரு குடிசையில் வசித்தார். மிக எளிய உணவையே உண்டார். ஆனாலும், சிறுகச்சிறுகச் சேமித்து வாரிவாரிக் கொடுத்தார் கல்விக்காக. தாம் ஈட்டிய பொருளில் பெரும் பகுதியை பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் அள்ளித்தந்தார். புகழ் பெற்ற நாங்கை பல்களைக்கழகத்திற்கு சுமார் 35,000 யுவான் பாய் பெங் லி கொடுத்தார் என்று அந்தப் பல்கலைக்கழகத்தின் மாணவர் நலத்துறை அதிகாரி லியு ஹை சென் கூறுகிறார்.
பணம் என்பது மணற்கேணியா? தோண்டத் தோண்ட தண்ணீராய் ஊறுவதற்கு? ஆகவே இன்னும் இன்னும் கொடுக்க இன்னும் சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசையுடன் 1995இல் டியான்ஜின் ரயில்வே நிலையத்திற்கு அருகில் ஒரு சிறு கடையைத் திறந்தார்.
|