இவருடைய வாரிக் கொடுக்கும் வள்ளல் குணம், குடும்பத்தினருக்குப் பிடிக்கவில்லை. ஏனென்றால், தனது குடும்பத்திற்காக இவர் எதுவுமே செய்யவில்லை. அப்பா செய்தது எதுவுமே ஆரம்பத்தில் நாங்கள் விரும்பவில்லை. எங்களுக்காக ஒன்றும் செய்யவில்லை. அப்புறம் தன்னுடைய உடம்பைப் பற்றிக் கவலைப்படாமல் வேலை செய்தார். ஆனால் அவரால் பல ஏழை மாணவர்கள் படிப்பறிவு பெற முடிகிறது என்பதைப் பார்த்த போது அவரைப் புரிந்து கொண்டோம்" என்று கூறினாள் பாய் பெங் லியின் மகள் பாய் ஜின் பெங்.
அவர் பேசிய பேச்சும், செய்த செயலும் இன்றைக்கும் பல ருடைய நினைவில் நிழலாடுகின்றன. "1996இல் அவர் முதன் முதலாக நான்க்கை பல்கலைக்கழகத்திற்கு பணம் நன்கொடை கொடுக்க வந்தார். அவரிடம் இருந்த ஒவ்வொரு பணமும் அவர் வியர்வை சிந்தி கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்தது என்பதை அறிந்தோம். எண்பது வயதைத் தாண்டிய ஒரு முதியவரிடம் இருந்து நன்கொடை பெற நாங்கள் விரும்பவில்லை. ஆனால் அவர் வற்புறுத்தினார். இன்னும் பணம் கொண்டு வருவேன் என்று கூறினார்" என்று விவரித்தார் நான்க்கை பல்கலை அதிகாரி லியு.
கடந்த மே மாதம் பாய் பெங் லி நோய்வாய்ப்பட்டார். அவருக்கு நுரையீரல் புற்று நோய். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 20 நாட்கள் நினைவி ழந்த நிலையில் இருந்து மடிந்தார்.
பாய் பெங் லியின் உடல் நிலை மோசமாகி விட்டது என்று கேள்விப்பட்டதும் நான்கைப் பல்கலைக்கழக மாணவர்கள் இந்த மாதத் தொடக்கத்தில் தாளில் 99 கொக்குகளைப் போல மடித்து தயாரித்தனர். கொக்கு நீண்ட ஆயுள் உடையது என்பதால், மிகவும் நெருங்கிய ஒருவர் மரணப்படுக்கையில் இருக்கும் போது, அவருக்காக வேண்டுதல் செய்து தாளில் கொக்கு தயாரிப்பது சீனப் பண்பாட்டில் ஒரு சிறப்பு. பாய் பெங் லியை கடைசியாகப் பார்த்த ஒரு மாணவர், "அவருடைய முகத்தில் சுருக்கங்கள் நிறைந்திருந்தன. ஆனாலும் கண்களில் அப்பாவித்தனம் ஒளிர் விட்டது," என்று கூறினார். "என்னைப் பார்த்தும் புன்னகைத்தார். அந்தப் புன்னகையை மீண்டும் எப்போதாவது காண்பேன்" என்று அந்த மாணவர் கூறினார்.
"ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியமில்லை உயிர்க்கு" என்ற வள்ளுவர் வாக்கிற்கு ஒரு வாழும் உதாரணமாகி விட்டார் சீனத்து முதியவர் பாய் பெங் லி.
தமிழ் நாட்டிலும் ஒரு பாய் பெங் லி இருக்கிறார். அவர் தான் சோதிடர் எஸ். ஏ. பி. வரதன். ஒவ்வோர் ஆண்டும் ஏழை மாணவர்கள் கல்வி கற்க நன்கொடை வழங்குகிறார்.
ஒவ்வொரு நாட்டிலும் இப்படிப்பட்ட வள்ளல்கள் இருந்து விட்டால் எல்லோரும் எல்லாமும் பெற்று, இங்கு இல்லாமை இல்லாத நிலை நிச்சயம் ஏற்படும்.
|