20வது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ளும் சீனப் பிரதிநிதிக் குழு பிப்ரவரி 9ஆம் நாள் முற்பகல் இத்தாலியின் தூர்லிங் நகரிலுள்ள ஒலிம்பிக் கிராமத்தில் கொடி ஏற்ற விழாவை நடத்தியது. சீனப் பிரதிநிதிக் குழுத் தலைவரும் சீன ஒலிம்பிக் கமிட்டியின் தலைவருமான லியூ பொங்கும், விரைவு சறுக்கல் அணி, குறுகிய தூர விரைவு சறுக்கல் அணி ஆகியவற்றைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.
விழாவில், ஒலிம்பிக் கிராமத்தின் தலைவர் சீனப் பிரதிநிதிக் குழுவுக்கு இந்த குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான தீபந்தத்தை வழங்கினார். பிரெஞ்சு பிரதிநிதிக் குழு, சைப்பிரஸ் பிரதிநிதிக் குழு ஆகியவற்றின் கொடி ஏற்ற விழாக்களும் இதே நேரத்தில் நடைபெற்றன. சீனப் பிரதிநிதிக் குழுவின் தலைமை பணியகம் நேற்றிரவு தூர்லிங் நகருக்கு மாறியுள்ளது.
இந்த குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ளும் சீனப் பிரதிநிதிக் குழுவில் மொத்தம் 151 பேர் உள்ளனர். அவர்களில் 76 விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் உள்ளனர். 1980ஆம் ஆண்டுக்குப் பின் சீனா குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கு அனுப்பிய மிக பெரிய பிரதிநிதிக் குழு இதுவாகும். சீன விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் தூர்லிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் 3 பெரிய விளையாட்டுகளைச் சேர்ந்த 47 போட்டி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வார்கள். அத்துடன் குறுகிய தூர விரைவு சறுக்கல், விரைவு சறுக்கல், இசை நடன சறுக்கல், சுதந்திர பாணி உறைப்பனிச் சறுக்கல் முதலிய நிகழ்ச்சிகளில் தங்கப் பதக்கங்களைப் பெற பாடுபடுவார்கள்.
தற்போது, சீன வீரர்களும் வீராங்கனைகளும் மிகவும் மும்முரமாக பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் சிறந்த நிலையிலும் மிகுந்த நம்பிக்கையுடனும் இருக்கிறார்கள். சீன ஆடவர் குழுவில் புகழ் பெற்ற வீரர் லீ ச்சியா ஜுன்னின் தற்போதைய நிலைமை மிகவும் சிறப்பாக உள்ளது. போட்டியில் அவர் தனது அனுபவங்களுடனும் சிறந்த மனநிலையுடனும் இருந்தால் நல்ல சாதனை பெறும் வாய்ப்பு உண்டு என்று ஆடவர் குழுவின் தலைமை பயிற்சியாளர் பெங் கை கூறினார்.
|