உலகிலேயே சீனாவில்தான் அதிக அளவு பன்றிக்கறி தயாரிக்கப்படுகிறது. கோழி இறைச்சி தயாரிப்பில் உலகின் இரண்டாவது பெரிய நாடாகச் சீனா திகழ்கிறது. ஆனால் இது நாள் வரை குடியிருப்புக்களுக்கு அருகிலேயே இறைச்சி கூடம் அமைக்கப்பட்டு, வெட்டப்பட்டதும் உடனுக்குடன் சமைக்கப்பட்டது. இப்போது தான் சீனாவில் இறைச்சி தயாரிப்பு ஒரு பெரிய தொழிலாக மாறி வருகிறது. ஆகவே, மேலை நாடுகளைப் போலவே, சீனாவிலும் பிராணிகள் வதைக்கப்படும் என்று வருத்தப்படுகின்றனர் சைவ உணவுப்பிரியர்கள். சீனாவில் இருக்கும் போது தீவிர சைவமாக இருப்பது அவ்வளவு எளிதல்ல. எந்தப் பண்டத்திற்குள் இறைச்சி ஒளிந்திருக்கும் என்று சொல்ல முடியாது. வெளித் தோற்றத்திற்கு சாதுவாகக் காட்சி தரும் தோஃபு கூட, சில சமயங்களில் இறைச்சி உள்ளே வைத்து தயாரிக்கப்படுகிறது. உணவு விடுதியில் போய் பு யாவ் பங் ரோ-அதாவது எனக்கு இறைச்சி வேண்டாம் என்றால், மாட்டுக்கறி கலந்த உணவைப் பரிமாறுகிறார்கள். கேட்டால், மாட்டுக்கறி இறைச்சி அல்ல என்று புன்சிரிப்போடு பதில் தருகிறாள் பணிவிடைப் பெண். ஆகவே, சீனாவில் சைவமாக இருப்பதற்கு நிறையப் பொறுமையும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும், நீங்கள் சைவம் என்பதை திரும்பத்திரும்பச் சொல்லி புரிய வைக்கும் திறமையும் தேவை. "ரோமில் இருக்கும் போது ரோமானியராக இருங்கள். அதே போல சீனாவில் ஒரு சீனராக இருங்கள்," என்றார் கலையரசி. அதனால் நான் வீட்டிலே சைவமாகவும், வெளியே விருந்துகளில் அசைவமாகவும் இருக்கிறேன். பாம்புக்கு வாலும் மீனுக்கு தலையும் காட்டும் தண்ணீர் பாம்பு போல.
|