கடந்த செவ்வாயன்று இரவு இந்திய நேரம் 9 மணிக்கு தொடங்கிய பிரேஸில் - கானா இடையிலான உலகக் கோப்பை கால்பந்து போட்டிப் பந்தயம் பல சாதனைகள் முறியடிக்கப்படும் முக்கிய பந்தயமாக கால்பந்தாட்ட உலகால் கணிக்கப்பட்டது. கணிப்புகளும், எதிர்பார்ப்புகளும் பொய்க்கவில்லை, பிரேஸிலின் ரொனால்டோ, காஃபூ மற்றும் பிரேஸில் அணி புதிய சாதனைகள் இப்பெயர்களில் பொறிக்கப்பட்டன. அன்றைய பந்தயத்தை 3-0 என்ற கணக்கில் பிரேஸில் அணி வெற்றி பெற்றது.
காலிறுதிக்கு முன்பான நிலையில் இருந்த ஆப்பிரிக்க கண்டத்தின் ஒரே அணி, கால்பந்தாட்ட உலகக் கோப்பையை வென்றெடுக்கும் இலக்கோடு இவ்வளவு நெருக்கமாக போட்டியில் இடம்பெற்ற ஒரே ஆப்பிரிக்க அணி என்ற பெருமையோடு கானா அணி பிரேஸில் அணியிடம் தங்கள் வெற்றி வாய்ப்பை கோட்டைவிட்டு சென்றது. ஆனால் கானா அணியினரின் திறமையான விளையாட்டு அவர்கள் இனிவரும் உலகக்கோப்பைகளில் தொடர்ந்து அச்சுறுத்தலாக நிற்கக்கூடிய அணியினர் என்பதை கட்டியம் கூறுவதாக அமைந்ததை உலகம் நினைவில் கொள்ளும்.
3-0 என்ற கோல கணக்கில் பிரேஸில் வென்றதன் மூலம் பிரேஸில் அணி உலகக் கோப்பை வரலாற்றில் 200 கோல்கள் அடித்த முதல் அணி என்ற சாதனை பெற்றது. இப்பந்தயத்திற்கு முன்பாக 198 கோல்களோடு களமிறங்கிய பிரேஸில் தற்போது 201 கோல்கள் பெற்ற அணியாக நிற்கிறது. பிரேஸில் அணியின் 100வது கோலை அடித்தது கால்பந்தாட்ட உலகின் புகழ்பெற்ற வீரர் பெலே என்பது குறிப்பிடத்தக்கது. 3-0 என்ற கோல் எண்ணிக்கையில் அன்றைய முதல் கோலை அடித்தது ரொனால்டோ.
இந்த கோல் மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக கோலகளை அடித்த பெருமை ரொனால்டோவுக்கு கிடைத்தது. இதற்கு முன்பு ஜெர்மனியின் கேர்ட் மியுல்லர் 14 கோலகள் அடித்திருந்தார். ரொனால்டோ அன்று அடித்த கோல் அவருடை 15வது கோல் ஆக புதிய சாதனையில் அவரது பெயர் பொறிக்கப்பட்டது. பிரேஸில் அணியின் தலைவரான காஃபூ பங்குபெற்ற அன்றைய பந்தயம் அவருடைய 19வது உலககோப்பை பந்தயமாகும்.
அதற்கு முன்பாக பிரேஸில் அணியின் டுங்கா மற்றும் டாஃரேல் ஆகியோர் தலா 18 பந்தயங்களில் கலந்து கொண்டு அதிக பந்தயங்களில் பங்கேற்ற பிரேஸி நாட்டவர் என்ற பெருமையை கொண்டிருந்தனர். தற்போது அதிக பந்தயங்களில் பங்கேற்ற பிரேஸில் நாட்டவர் காஃபூ. உலக அளவில் அந்த சாதனையை கொண்டிருப்பவர் ஜெர்மனியின் லோத்தர் மத்தாயெஸ். அவர் 25 உலககோப்பை பந்தயங்களில் கலந்து கொண்டவர்.
|