சீனாவுடன் இப்படிப் பிரிக்க முடியாத ஓர் உறவு எப்படி ஏற்பட்டது? முனுசாமி ஞானவேல் செட்டியார் தமது 24வது வயதில் ஹாங்காங் வந்த போது, அந்த நகரின் அவசர வாழ்க்கை அவருக்குப் பிடிக்கவில்லை. இந்தியாவிற்குத் திரும்பி விட வேண்டும் என்று முடிவு செய்து பயணச்சீட்டு வாங்கி விட்டார். வாழ வழிதேடி ஹாங்காங் வந்தேன். ஆனால் எனக்குக் கிடைந்ததோ ஏமாற்றம் என்று விரக்தியுடன் கூறுகிறார். ஊர் திரும்ப மூன்று நாட்கள் இருந்த போது, திடீரென மகெளவுக்குப் போனால் என்ன என்ற ஓர் எண்ணம் ஏற்பட்டது. உடனே படகில் ஏறி விட்டார். மகெள சுங்க அலுவலகத்தில் முறுக்குமீசையுடன் இருந்த முரட்டு போர்த்துக்கீசிய அதிகாரி. புன்சிரிப்புடன் வரவேற்று, விசாவில் முத்திரை குத்தி, "1962க்கு பின்னர் மகெளவுக்குள் நுழைந்த முதல் இந்தியரே வருக" என்று வரவேற்றார். மரங்கள் அடர்ந்த மகெள நகரின் அமைதியான வாழ்க்கை அவருக்குப் பிடித்துப் போனது. ஒரு சில நாட்களிலேயே, "நான் தேடிய இடம் இதுவே" என்று தீர்மானித்தார். அந்தக் காலத்தில் மகெள நகரத்தில் பெரிய கட்டிடங்கள் இல்லை. ஓரடுக்கு அல்லது இரண்டடுக்கு மாடிக் கட்டிடங்களே இருந்தன. ஆகவே, கட்டிடத் தொழிலாளியாக வந்த ஞானவேல் படிப்படியாக ஒரு கட்டிடக் காண்ட்ராக்டராக மாறினார். காலப்போக்கில், நகரம் வளரவே, 14 ஆண்டுகள் கழித்து தமது முதலாவது உணவு விடுதியைத் தொடங்கினார். இவ்வாறாக இந்தியன் கிச்சன் என்னும் உணவகம் உருவெடுத்து ஒரு சங்கிலித் தொடராக வளர்ந்து விட்டது.
உணவக வியாபாரம் வளர வளர, வெறும் உணவளிப்பதோடு நின்றுவிடக்கூடாது என்று தீர்மானித்தார். ஷாங்கை, ஷென்ஜென், ஜூகாய், மகெள ஆகிய நகரங்களில் இந்திய மசாலாக்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகளை நிறுவினார். சீனர்கள் எனது உணவகத்திற்கு உணவருந்த வருகிறார்கள் என்றால், நான் அவர்களுடைய சமையலறை வரைக்கும் போய், அவர்களுடைய உணவில் இந்திய வாசனை வீச வேண்டும் என விரும்பினேன். 130 கோடி சீனர்களும் தங்களது வீட்டில் இந்திய மசாலாப் பொருட்களைப் பயன்படுத்தி சமைக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். எனவேதான் மசாலா தொழிற்சாலைகளைத் தொடங்கினேன் என்கிறார்.
உண்மைதான். இன்றைக்குப் பல சீனர்கள் இந்தியன் கிச்சனுக்கு வந்து புரோட்டா, குருமா, பிரியாணி, பூரி, தோசை என்று வகைவகையாக இந்திய உணவுகளை அருந்தி மகிழ்கிறார்கள். அதுமட்டுமல்ல. இந்திய மசாலாக்களை கேட்டுவாங்கிச் செல்கின்றனர். கூடவே, சமையல் குறிப்புக்களையும் எழுதி வாங்குகின்றனர்.
|