சீனாவின் பல பகுதிகளில் உள்ள மடங்களுக்குச் சென்று புத்தமதமறைகளைத் தெளிவாகக் கற்ற போதிலும் அவருடைய உள்ளத்தில் ஒரு குழப்பம் நிலவியது. சீனாவில் புத்தமதம் விரைவாகப் பரவிய போதிலும், அதன் கோட்பாடுகள் சரியான முறையில் ஆய்வு செய்யப்படவில்லை. புத்தமதத்தின் ஒவ்வொரு பிரிவினரும் ஒவ்வொரு விளக்கங்களைச் சொல்லி மக்களைக் குழப்பிக் கொண்டிருந்தனர். ஆகவே புத்தமதம் பிறப்பெடுத்த இந்தியாவுக்கே சென்று ஆராய்வதென ச்சுவான் சாங் தீர்மானித்தார்.
கி. பி. முதலாம் நூற்றாண்டில் புத்தமதம் இந்தியாவில் இருந்து சீனாவுக்குள் நழைந்தது. கி.பி. 67ஆம் ஆண்டில் ஹன் பேரரசர் புத்த மத மறைகளைக் கொண்டு வருவதற்காக இந்தியாவிற்குத் தூதுவர்களை அனுப்பியதாகக் கூறப்படுகிறது. அப்போது அந்தத் தூதுவர்கள் சென்ற வழியில் ஒரு வெள்ளைக் குதிரை மேல் புத்தமறைகளை ஏந்தியபடி இரண்டு இந்தியத் துறவிகள் சீனாவை நோக்கி வந்து கொண்டிருந்தனர். அவர்களை ஹன் பேரரசரின் தூதுவர்கள் எதிர்கொண்டழைத்து பழைய பட்டுப்பாதை வழியாகச் சீனாவை நோக்கி கிழக்குத் திசையில் பயணமானார்கள். மத்திய சமவெளியில் உள்ள லுவோயாங் நகரில் புதிதாகக் கட்டப்பட்ட ஒரு கோயிலில் புத்தமறைகளை இறக்கி வைத்தனர். அந்தக் கோயில் தான் பிற்காலத்தில் வெண்குதிரைக் கோயில் என அறியப்பட்டது. சீனாவின் முதலாவது புத்தக் கோயிலான அந்த வெண்குதிரைக் கோயிலுக்கு முன்னே புத்தமறைகள் ஏற்றப்பட்ட ஒரு வெள்ளைக் குதிரையின் சிலை நிற்பதை இன்றைக்கும் காணலாம். அடுத்த 500 ஆண்டுகளில் சீனாவின் மத்திய சமவெளிப் பகுதி முழுவதும் புத்தமதம் மிக விரைவாகப் பரவியது. இவ்வளவு வேகமாகப் பரவிய போதிலும் புத்தமதக் கோட்பாடுகள் பற்றிய ஆய்வு சீனாவில் முழுமையாக இல்லையே என்ற குறை ச்சுவான் சாங்கின் மனதை உருத்திக் கொண்டிருந்தது. புத்தமறைகள் சீன மொழியில் சரிவர மொழி பெயர்க்கப்படவில்லை. தவறான விளக்கங்கள் தரப்பட்டன. சீனாவில் இருந்த ஒவ்வொரு புத்தமதப் பிரிவும் ஒவ்வொரு வகையில் விளக்கங்களைச் சொல்லிக் கொண்டிருந்தன. ஆகவே, சிறு வயதிலேயே இடர்களைப் பற்றிக் கவலைப்படாமல் இலக்கை நோக்கி முன்னேற வேண்டும் என்ற இலட்சிய வேட்கை கொண்டிருந்த ச்சுவான் சாங், இந்தியா சென்று புத்தமதம் பற்றிய மெய்யறிவு பெறுவது எனத் தீர்மானித்தார்.
கி.பி. 627ஆம் ஆண்டு 27 வயதான ச்சுவான் சாங், தாங் வமிச ஆட்சியின் எல்லையான யுமென் கணவாயில் இருந்து மேலைத்திசை நோக்கி பாலைவனம் வழியாகப் பயணமானார். அவருடைய வழிகாட்டி பாதியிலேயே ஓடிவிட தன்னந்தனியே ஒரு நோஞ்சான் கிழட்டுக் குதிரை மீதேறிச் சென்றார். அப்போதிருந்த அரசுகள் எல்லையில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருந்தன. கடவுச்சீட்டு கோரி ச்சுவான் சாங் விண்ணப்பித்த போது மறுக்கப்பட்டது. எனவே இருட்டில் திருட்டுத்தனமாக சுற்றுப்பாதை வழியே போய் எல்லை தாண்டினார். கடைசிக் கணவாயைச் சென்றடைந்த போது வழிதப்பி விட்டது. போதாக் குறைக்கு தண்ணீர்ப் பையும் கீழே விழுந்து பாலைமணலில் நீர் சிந்தியது. எனவே எட்டு கி. மீ தூரம் பின் வாங்கினார். ஆனால் இந்தியாவைச் சென்றடையும் வரை கிழக்கு நோக்கித் திரும்பமாட்டேன் என்று சூளுளரத்து முன்னேறினார். குடிக்கத் தண்ணீர் இன்றி நான்கு நாட்கள் பயணம் செய்து, கடைசியில் சீனாவின் மேற்குப் பகுதியில் உள்ள காவ்சாங் தேசத்தை அடைந்தார். புத்தமதத்தில் மிகுந்த ஈடுபாடுள்ள அந்த மன்னன் ச்சுவான் சாங்கை வரவேற்று, குடிமக்களிடையே உரையாற்ற வைத்தான். தனது அரண்மனையிலேயே தங்கும் படி வற்புறுத்தினான்.
கடைசியில் அவர் உண்ணாவிரதம் இருந்து புறப்படுவதற்கு அரசனிடம் அனுமதி பெற்றார். அவன் ஏராளமாக பரிசுகளையும், குதிரைகளையும், 50 பணியாளர்களையும் கொடுத்து வழியனுப்பினான். டியான்ஷாங் மலைவழியாகச் சென்ற போது பனிப்புயல் வீசியது. அவருக்கு உதவியாகச் சென்ற 20 பேர் இறந்து போனார்கள். இறுதியில் 628ஆம் ஆண்டில் இந்திய எல்லையில் ச்சுவான் சாங் காலடி எடுத்துவைத்தார்.
|