• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-12-25 21:53:19    
காய்கறிகளும் பிரமாதம்

cri

மாயா பஜார் திரைப்படத்தில் பிரமாண்டமான உருவத்தில் எஸ். வி. ரங்காராவ் அவர்கள் மிக அழகாக தன் முன் வைத்த உணவுப் பொருட்களை லபக் செய்வார். பொதுவில் திருமண விழாக்களில் சைவ உணவே விருந்தாக அளிக்கப்படுகிறது. அசைவ உணவு விருந்தை திருமண விழாக்களில் அளிக்கும் வழக்கமும் இருக்கிறது. நகரங்களில், திருமண விருந்தில் கலந்துகொள்ளும் பலதரப்பட்ட நண்பர்கள், நல விரும்பிகளுக்காக, சைவ உணவு தனியாக, அசைவ உணவு தனியாக என்று இரண்டு வகையும் இணைந்த விருந்து வழங்கப்படுவதை அதிகம் காணலாம். பசிக்கும் நேரத்தில் உணவும், விருந்துமாக இன்றைய அறிவியல் உலகம் நிகழ்ச்சி அரங்கேறிக்கொண்டிருக்கிறது.

சைவ உணவைவிட அசைவ உணவில்தான் சத்து அதிகம் என்பது பரவலான நம்பிக்கை. சைவ உணவு சாப்பிடுபவர்கள் எல்லாம் நோஞ்சான்கள் என்றும் அசைவ உணவைச் சாப்பிடுபவர்கள் எல்லாம் பலசாலிகள் என்றும் ஒரு பரவலான நம்பிக்கை மறுபுறம். இரண்டும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. சைவ உணவில் சத்து குறைவு என்பதால் அதை சாப்பிடுபவர்கள் பலசாலிகளாக இருப்பதில்லை, அசைவ உணவு சாப்பிடுபவர்கள் அதற்கு நேர் மாறாக பலசாலிகளாக இருக்கின்றனர் என்பதே இந்த நம்பிக்கையின் பின்னணி. ஆனால் இன்றைக்கு உலகில் பலரும் சைவ விரும்பிகளாக மாறிக்கொண்டுள்ளனர். மருத்துவ அறிவியலின் முன்னேற்றத்தின் வாயிலாக, மனித இயல்போடு நெருங்கிய தொடர்புகொண்டது, அதிக பயனுள்ளது என்று அறிவியலர்கள் குறிப்பிடுவது சைவ உணவைத்தான். அறிவியற்பூர்வமாகவும் மனித உடலுக்கு பொருத்தமான உணவாக சைவ உணவையே சுட்டிக்காட்டுகின்றனர். அசைவ உணவில் உள்ள கொழுப்புச்சத்தும், கொழுப்பு அமிலங்களும் நமக்கு இதய நோய், கண் நோய், ரத்த அழுத்தம் என பலவற்றை ஏற்படுத்தக் கூடியவை. சுருக்கமாக சொன்னால் அசைவ உணவில் 60 விழுக்காடு உடலுக்கு பயனுள்ள நல்ல சத்தான பொருட்கள் உள்ளன ஆனால் 40 விழுக்காடு உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுப்பொருட்களும் உள்ளன. மேலும் அசைவ பொருட்கள் வயிற்றில் அமிலத்தன்மையை, உண்டாக்கி வயிற்றில் பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன என்றும் கண்டறிந்துள்ளனர்.

இதெல்லாம் தெரிந்தது தானே என்று நினைப்பவர்களுக்கு இப்போது கூடுதலான, புதிய தகவல்கள். வழமையாக விருந்துக்குச் செல்லும்போது, சைவ உணவு மட்டுமே சாப்பிடுபவர்கள் என்றால், கொஞ்சம் சிக்கல்தான். சில சமயம் அந்த நபர் தொந்தரவாகவே பார்க்கப்படுவார். விருந்துக்கு அழைப்பவருக்கும் சிரமம், அழைக்கப்பட்ட சைவ உணவு மட்டுமே சாப்பிடும் நபருக்கும் சிரமம். ஆனால் அன்மையில் செய்யப்பட்ட ஒரு ஆய்வின் முடிவு, சைவ பிரியர்களை மகிழ்ச்சியடை வைப்பதாக அமைகிறது. அசைவ உணவு அதிகம் சாப்பிடும் நபர்களைக் காட்டிலும், சைவம் மட்டுமே உண்பவர்களுக்கு புத்திசாலித்தனம் அதிகம் என்று ஆய்வு ஒன்று கூறியுள்ளது. அறிவாற்றலை, புத்திசாலித்தனத்தை அறிய உதவும் ஐ கியு இன்டெலிஜன்ஸ் கோஷியன்ட் அளவுகோலில் அசைவ உணவை உண்பவர்களை விட 5 புள்ளிகள் அதிகமாக சைவ உணவை மட்டும்மே உட்கொள்பவர்கள் பெற்றுள்ளதாக இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் அன்மையில் வெளியான பிரித்தானிய மருத்துவ இதழில் குறிப்பிட்டுள்ளனர்.

சைவ உணவு உட்கொள்வதால் ஏன் இப்படி புத்திசாலித்தனம் அல்லது அறிவாற்றல் அதிகமானது என்பது பற்றிய தெளிவு இந்த ஆய்வாளர்களுக்கு இல்லை ஆனால், 8 ஆயிரம் பேரை கடந்த 20 ஆண்டுகாலம் ஆய்வு செய்ததில் காய்கறிகளும், பழங்களும் ஏதோ ஒரு விதத்தில் மனித மூளையின் ஆற்றலை வளப்படுத்தியுள்ளது என்பதை ஒப்புக்கொள்கின்றனர். 10 வயது நிரம்பிய சிறுவர்களும், சிறுமிகளும் அறிவாற்றலை அறிய உதவும் சில சோதனைகள் மற்றும் தேர்வுகளுக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு 30 வயதானதும் மீண்டும் அனைவரையும் அழைத்து அவர்கள் சைவம் மட்டும் சாப்பிடுபவர்களா அல்லது அசைவ பிரியர்களா என்று அறிந்துகொண்டு, மீண்டும் அவர்களது அறிவாற்றல் சோதனை செய்யப்பட்டது. பின்னர் அவர்களின் இளம் பருவத்து சோதனை முடிவுகள் தற்போதைய முடிவுகளோடு ஒப்பிடப்பட்டது. இவர்களில் 4.5 விழுக்காட்டினர் சைவம் மட்டும் உண்பவர்கள். முடிவுகளை மேலும் ஆராய்ந்தபோது, குழந்தைகளாக இருந்தபோது அதி புத்திசாலிகளாக இருந்தவர்கள் வளர்ந்த பின் சைவம் மட்டும் உண்பவர்களாக, இறைச்சி மற்றும் மீன் வகைகளை மறுப்பவர்களாக மாறியது கண்டறியப்பட்டது. சைவம் மட்டுமே உண்பவர்கள் குழந்தைகளாக இருந்தபோது ஐ கியு அளவுகோளில் 105 புள்ளிகள் பெற்றனர், அதாவது தொடர்ந்து அசைவம் சாப்பிட்டுக்கொண்டிருந்த மற்றவர்களை விட 5 புள்ளிகள் அதிகமாக அவர்கள் பெற்றிருந்தனர். மேலும் இந்த சைவம் மட்டும் உண்பவர்கள் நன்கு படித்தவர்களாகவும், நல்ல வேலையில் உள்ளவர்களாவும் இருந்தனர்.

சைவ உணவை மட்டுமே சாப்பிடுபவர்களுக்கும், சைவ உணவுப்பிரியர்கள் ஆனால் மீன் அல்லது கோழி இறைச்சி சாப்பிடுவதுண்டு என்று சொல்பவர்களுக்குமிடையில் அப்படி ஒன்றும் பெரிய அளவில் அறிவாற்றல் அளவுகோலில் வேறுபாடு இல்லை என்றும் கூறப்படுகிறது. அது மட்டுமல்ல, சைவ உணவு மட்டுமே உண்பவர்களில் ஆண்களை விட பெண்களே அதிக எண்ணிக்கையில் உள்ளதாக அறியப்படுகிறது. அதாவது பெண்கள் ஆண்களை விட தங்களது உடல் நலனில் அக்கறை செலுத்துவதை இது உணர்த்துகிறது. ஆமாம் சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு உடல் பருமன் பிரச்சனை ஏற்படுவது மிக மிகக் குறைவு, ஆக பெண்கள் இதையெல்லாம் அறிந்தால் அசைவத்தை நாடுவார்களா என்ன?

முந்தய சில ஆய்வுகள் சைவ உணவு உட்கொள்பவர்கள் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் அளவு அல்லது கொழுப்புச்சத்து அளவு குறைவாக கொன்டிருந்ததால் அவர்களுக்கு மாரடைப்பு, இதய நோய் ஏற்படும் அச்சுறுத்தல் குறைவா இருந்தது என்று கண்டறிந்துள்ளன.

ஆக குழந்தைகளுக்கு காய்கறிகளையும், பழங்களையும் அதிகம் சாப்பிடக் கொடுப்பது நல்லது என்பது நமக்கு புரிகிறது அல்லவா. இனிமேல் அசைவமே சாப்பிடக்கூடாது என்று திடீரென முடிவெடுத்துவிட வேண்டாம். இறைச்சியை அதிகம் சேர்க்காமல் காய்கறிகளை அதிகம் சேர்த்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். காய்கறிகளும், பழங்களும் நமக்கு தேவையான ஊட்டச்சத்துகள் அனைத்தையும் கொண்டிருக்கின்றன. அறிவாற்றலுக்கு மட்டுமல்ல உடல் நலம் சீராக பாதுகாத்து இதய் நோய், ரத்த அழுத்தம், உடல் பருமன் ஆகிய சிக்கலுக்கு முகம் கொடுப்பதையும் காய்கறிகளும், பழங்களும் தவிர்க்க உதவும். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் குறிப்பிட்ட பாடலை மீண்டும் உங்களுக்கு நினைவு படுத்தி விடை பெறுகிறேன். மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம். கல்யாண சமையல் சாதம், காய்கறிகளும் பிரமாதம்.