அன்பிற்கும் உண்டோ அடைக்குந் தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்-அன்பை அடைத்து வைக்க முடியுமா? கண்ணீர் காட்டக் கொடுத்து விடாதா?என்று திருவள்ளுவர் கூறினார். உண்மைதான். உள்ளத்தின் அதலபாதாளத்தில் ஆழப்பதிந்து உறைந்து விட்ட உணர்வுகள் நம்மை அறியாமலேயே கண்ணீராக வெளிப்பட்டு விடுகின்றன. உறைபனி உருகி நதிநீராகப் பாய்வது போல, உள்ளத்து உணர்வுகள் உருகி கண்ணீராக வடிகிறது. சீன மொழியில் கண்ணீரை 'லெய் ஷ்வெய்' என்கிறார்கள். 'லெய்' என்றால் கண். 'ஷ்வெய்' என்றால் நீர். மனதில் மட்டற்ற மகிழ்ச்சி ஏற்படும் போது, உணர்ச்சிப் பெருக்கால் உள்ளம் திண்டாடி ஆனந்தக் கண்ணீர் வழிந்தோடி கண்களை மறைக்கிறது. ஆனந்தம் அதிகரிக்கும் போது அது கண்ணீராக வெளியாகிறது-Xi Zi Le Qi-என்கிறார்கள் சீனர்கள். பொங்கிப் பொங்கிச் சிரிக்கும் போதும், கண்ணீர் வழிகிறது. Po Li Wei Xiao-அல்லது Xiao Chu Yan Lei Lai-கண்களில் கண்ணீர் வடியும் வரை கெக்கலி கொட்டிச் சிரிப்பார்களாம். நமது நகைச்சுவை நடிகர்கள் சிலர் நடிக்கும் லட்சணத்தைப் பார்க்கும் போது நமக்கு அழுகையினாலேயே கண்ணீர் வருகிறது. துயரத்திற்கும், துக்கத்திற்கும் கூட கண்ணீர் தான் அறிகுறி. Lei Ru Yu Xia-மழைத்துளிகள் போல கண்ணீர் சொட்டுகிறது. Lei Liu Man Mian-கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடுகிறது-அப்போது தேம்பித்தேம்பி அழுவிறோம்-Qi Bu Cheng Sheng-கண்ணீர் வழிந்தோட பெரிதாக ஓலமிட்டு ஒப்பாரி வைத்து அழலாம்-Tong Ku Liu Ti-அப்போது தான் மனப்பாரம் இறங்கும். இல்லையா? துக்கம் தாளாமல் உள்ளம் உடைந்து போகும் போது, செத்துப் போனால் என்ன என்று கூட நினைப்பு வரும். Xin Sui உள்ளம் உடையும் போது, Shang Xin Yu Jue-துக்கப்படும் இதயம் மரணத்தையே விரும்பு என்திறார்கள் சீனர்கள். துன்பமும் துயரமும் வாட்டும் போது உள்ளம் மட்டும் உடைவதில்லை-ஈரல், குடல் எல்லாமே அங்குலம் அங்குலமாக அறுந்து ரோகிறதாம்-Gan Chang Cun Duan. இப்படிப்பட்ட நிலை உண்டாகும் போது கதறி அழுவதற்குக் கண்ணீர் கூட இல்லாமல் போய்விடும்-Yu Ku Wu Lei என்கிறார்கள் சீனர்கள்.
|