வாலிபால் உலகக் கோப்பையிலிருந்து சீனா விலகல்
cri
இவ்வாண்டின் இறுதியில் நடைபெறவுள்ள பெண்கள் வாலிபால் உலகக்கோப்பை போட்டியிலிருந்து விலக சீனா முடிவு செய்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. இவ்வாண்டு நடைபெறும் பன்னாட்டு பெண்கள் வாலிபால் போட்டிகளில் பங்கேற்பதைத் தவிர சீன அணியின் கவனம் முற்று முழுதாக அடுத்த ஆண்டின் பெய்சிங் ஒலிம்பிக் போட்டிகளுக்கான தயாரிப்புக்காகவே அமையும் என்று பெண்கள் அணியின் பயிற்சியாளர் அண்மையில் கூறியுள்ளார். போட்டிகள் அதிகமில்லாத நிலையால் அணியில் உள்ள வீராங்கனைகள் காயங்கள் குணமடைந்து , நலம் பெறவும் மீண்டும் பயிற்சி பெற்று புதுத் தெம்புடன் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தயாராகவும் வாய்ப்பு உருவாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் சீனா உலக கோப்பையிலிருந்து விலகுவதன் மூலம் வேறு ஒரு நாட்டுக்கு 2008 பெய்சிங் ஒலிம்பிக் போட்டிகளில் தகுதி பெறும் வாய்ப்பு கிடைக்கும். 2008ம் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற உலக கோப்பையின் வெற்றியாளரும் தகுதி பெறுவர். சீனா உபசரிப்பு நாடு என்ற வகையில் ஒலிம்பிக் போட்டிகளின் வாலிபால் போட்டிகளுக்கு ஏற்கனவே தகுதியும் உரிமையும் பெற்றுள்ளது. எனவே சீனா உலகக் கோப்பையிலிருந்து விலகுவதன் மூலம் வேறு ஒரு அணி போட்டியிட்டு வெற்றி பெற்று ஒலிம்பிக்கிலும் பங்கேற்கும் உரிமையை பெறும். ஏற்கனவே சர்வதேச ஒலிம்பிக் கூட்டமைப்பும் இதற்கான கோரிக்கையை சீனாவிடம் வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
|
|