கன்பூசிய வாதிகளும்-தாவோயிசமும்
cri
கன்பூசிய வாதிகளின் கபடத்தனத்தைத் தோலுரித்துக் காட்டுகிறேன் என்று சொல்லி, சுவாங்ஸி தமது கிண்டலடிக்கும் பாணியில் ஒரு கதை எழுதினார். "அமாவாகை இருட்டில் இரண்டு கன்பூசியஸ் அறிஞர்கள் கல்லறைக் கொள்ளைக்காகச் சென்றனர். விடியவிடிய கல்லறையைத் தோண்டியும், விலைமதிப்பற்ற பொருள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனாலும் அசந்து விட வில்லை. கவிதைபாடிக் கொண்டே கல்லறையைத் தோண்டினார்கள். "கிழக்கு வானம் வெளுத்திருக்கு நிலைமை இப்போ எப்படி இருக்கு?" என்று பாடினார் மூத்த அறிஞர். அப்போது இளைய அறிஞர் ஒரு பிணத்தின் உடைகளை மிகவும் சிரமப்பட்டுக் கனைத்து கொண்டிருந்தார். அவர் பாடினார். "வெளுக்க வெளுக்க வெளியே தெரியுது பிணத்தின் வாயிலே ஒரு நகை உடனே மூத்தவர்," சீக்கிரம், சீக்கிரமா எடு," என்று முடுக்கி விட்டு இன்னொரு பழங்காலப் பாடலைப் பாடினார். "தென்மலைச் சரிவிலே விளையும் கோதுமையின் நிறம் பச்சை; செத்துப்போன மனுசனுக்கு வாயிலே எதுக்கு நகை." ஒருவர் பிணத்தின் தாடி முடியைப் பிடித்து இழுக்க, இன்னொருவர் கத்தியால் பிணத்தின் வாயைப் பிளந்து விலைமதிப்பற்ற நகையை வெளியே எடுத்தார். இந்தக் கதை சிரிப்பை வரவழைக்கலாம். ஆனால், கற்றறிந்த தன்னடக்கமான கன்பூசியஸ்வாதிகள் ஒழுங்கு மரியாதை பற்றிக் கவலைப்படாத கபடர்கள் என்று சாடுவதற்காக சுவாங்ஸி இந்தக் கதை எழுதினார். கபடர்கள் எங்குதான் இல்லை! சட்டவியல் சிந்தனையை எடுத்து வைத்த ஹன் பெஃய்ஸி என்பவர் கன்பூசியஸ் சிந்தனையாளர்களை ஒட்டுண்ணிகள், மாறும் நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ளாதவர்கள் என்று விமர்சித்தார். முயல் வேட்டைக்குப் போய் விட்டு, அது தானாகவே வந்து மரத்தின் மீது முட்டி மோதி இறக்கும் என்று மரத்தடியில் காத்திருக்கும் முட்டாள்கள் என்று வர்ணித்தார். இவ்வாறு பற்பல சிந்தனைகள் தோன்றி முட்டிமோதி, தங்குதடையின்றி விவாதங்கள் நடைபெற்றதால், சீனா "நூறு சிந்தனைகள் வளரும் தேசம்" என்று போற்றப்பட்டது.
|
|