சீன மக்களின் வரலாற்றை நாம் ஆய்வு செய்வோமாயின், மூன்று முக்கிய அம்சங்களை காணலாம். சீனாவின் வரலாறு, உள்ளூர் அரசப்பதிவேடு மற்றும் குல / வம்ச வரலாறு ஆகியவையே இம்மூன்று அம்சங்கள். இதில் மக்களின் குல / வம்ச வரலாறு நீண்ட நெடிய வரலாறு கொண்டதும், மிகவும் செல்வாக்கு வாய்ந்ததும் ஆகும். ச்சியா பு எனப்படும் இந்த வம்ச வரலாறு, ஒரு குலத்தில், குழுவின், இனத்தின் வரலாறு, வழிவழியாய் தொடரும் உறவு வரலாற்றின் பதிவாகும். அதாவது ஒரு குறிப்பிட்ட நபருடைய குடும்பம் எந்த ஒரு குழுவை, இனத்தை சேர்ந்தது, அதில் இக்குடும்பத்தின் பாரம்பரிய வரலாறு, பாட்டன், முப்பாட்டன், பூட்டன்மார் யார் இதையெல்லாம் உள்ளடக்கியதுதான், ச்சியா பு அல்லது குல / வம்ச வரலாறு.
இதில் குடும்பங்கள் அல்லது குடும்பப்பெயர்களின் உருவாக்கம் அல்லது தோற்றம், குறிப்பிட்ட ஒரு குலம் அல்லது இனத்தின் இடப்பெயர்வு, குடிபெயர்வு, குடும்ப வரலாறு, மூதாதையர் சுயசரிதை, மற்றும் உள்ளூர் வழக்குகள்,கதைகள் முதலியவை தொகுக்கப்பட்டிருக்கும். ச்சியா பு எனப்படும் இந்த குல/வம்ச வரலாறு பல்லாண்டு காலம் முன்பாகவே பதிவு செய்யப்படத் தொடங்கியது எனலாம். கிமு 17ம் நூற்றாண்டு முதல் 11ம் நூற்றாண்டு வரையான ஷாங் வம்சக்காலத்திலேயே இத்தகைய குல/வம்ச வரலாற்று தொகுப்புகள் காணப்பட்டதாக தெரிகிறது.
அக்காலத்தில் ஆமை ஓடுகள், மாட்டு எலும்புகள், மற்றும் வெண்கலத்தில் குலங்கள்,இனக்களின் குடும்ப வரலாறு, இவர் இன்னாருடைய மகன் என பல தலைமுறைகளின் பட்டியல் எழுதப்பட்டதாம். எழுத்து கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னர், சீன குல/ வம்ச வரலாறு ஒரு கயிற்றில் முடிச்சுகளை இடம்விட்டு போடுவதன் மூலம் பதிவாக்கப்பட்டது. அம்புகள், காலணிகள், தொட்டில், வெண்கல் காசுகள், ஆடு மற்றும் பன்றிகளின் மூட்டெலும்பு முதலியவை இக்கயிற்றிலான முடிச்சுகளில் கட்டப்பட்டு தொங்கவிடப்பட்டன. ஒவ்வொரு பொருளும் குறிப்பிட்ட குடும்பத்தின் உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் அக்குடும்பத்தின் தலைமுறைகளின் எண்ணிக்கையை உணர்த்தின. இந்தத் தகவல், வாய்வழி சேதியாக பின்வரும் தலைமுறையினருக்கு அறிவிக்கப்பட்டன. ஆக மூதாதையர் யார், குடும்பத்தின் பின்னணி மற்றும் வரலாறு என்ன ஆகியவை மக்களுக்கு தெரிந்திருந்தது. அதற்கு அவர்களது பெற்றோரும், அவர்களது பெற்றோருமாக போதுமான தகவ்ல்களை பதிவு செய்திருந்தனர். வியப்பாக இருக்கிறதல்லவா. இப்படித்தான் பண்டைய சீன குல/ வம்ச வரலாறு பதிவு செய்யப்பட்டது.
எழுத்துக்களால் பதிவு செய்யப்பட்ட ச்சியா பு, குல/ வம்ச வரலாறு, மக்களின் இடப்பெயர்வு, குடி பெயர்வு மற்றும் சமூக மாற்றங்கள் மற்றும் வளர்ச்சி தொடர்பான தரவுகளை உள்ளடக்கியதாகும். ஒரு குறிப்பிட்ட குலத்தின், இனத்தின், குடும்பத்தின் உறுப்பினர்களது, வளர்ச்சியை அவர்களது அரசியல், இராணுவம் மற்றும் கல்வி சார் வெற்றிகளை விபரமாக பதிவுசெய்ததன் மூலம், ஒரு குறிப்பிட்ட நபரை பற்றி முழுமையாக அறிந்துகொள்ள ச்சியா பு வழி செய்தது. மேலும், குறிப்பிட்ட குலம், இனம், குடும்பத்தின் மூதாதையர்களை பற்றி புகழ்ந்து பேசி, எதிர்கால தலைமுறையினரை நற்செயல்கள் செய்து குலத்தின், இனத்தின், குடும்பத்தின் நற்பெயரை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் ஊக்குவித்தது.
இந்த ச்சியா பு எனும் குல/ வம்ச வரலாறு குறிப்பிட்ட குலம், இனம், குடும்பத்தின் மூத்த முதல் முதாதையரில் தொடங்கி, அவர் எப்படி குறிப்பிட்ட இடத்தில் வந்தடைந்தார், வாழ்ந்தார் அல்லது இடம் பெயர்ந்தார், எப்படி குடும்பத்தை தொடங்கினார் என்பதை பற்றியெல்லாம் குறிப்பிட்டு தற்போதைய, தலைமுறையினரின் தகவல் வரை உள்ளடக்கியிருக்கும். இடையில் வந்தவர்களின் இத்தகைய சேதிகளையும் இது உள்ளடக்கியிருக்கும். மூத்த முதல் நபரின் மகன்கள் மற்றும் அவர்களது வாரிசுகள் கொண்ட முதல் ஆறு தலைமுறையினர், ஒரு கோப்பில், படிவத்தில் பதிவு செய்யப்படுவர். மூத்த முதல் நபரின் முதலாவது மகன், முதலாவது பேரன், அவனது முதல் மகன், முதலாவது பேரன் என முதல் மகன்கள் எல்லாம் மேலிருந்து கீழாக வலது பக்கத்தில் பதிவு செய்யப்படுவர். மற்ற மகன்கள், பேரன்கள் எல்லாம் படிவத்தின், பக்கத்தின் நேர் இடதுபுறத்தில் பதிவு செய்யப்படுவர். ஒவ்வொரு தலைமுறையின் விபரங்கள், விளக்கங்கள் குறுக்கே குறுகிய பகுதிகளாக பிரித்து எழுதப்படும். பொதுவாக இந்த குல/வம்ச வரலாற்றில் பெண்களை பற்றி அப்படியொன்றும் பெரிதாக தகவல்கள் இடம்பெறுவதில்லையாம்.
|