ஹான் வம்சக்காலத்தில் ஷானயாங்கிலுள்ள ஜின்ஷியாங்கில் வாழ்ந்து வந்தான் ஃபான் ஷு. அவனுக்கு ஜூச்சிங் என்றும் ஒரு பெயருண்டு. ரூனான் என்ற இடத்தைச் சேர்ந்த ஷாங் ஷாவ் எனும் யுவான் பாவுடன் நெருக்கமான நட்பு கொண்டிருந்தான் ஃபான் ஷு. இவ்விருவரும் அரச கல்விக்கழகத்தில் ஒன்றாக பயின்றனர். படிப்பு முடித்து சொந்த ஊர்களுக்கு திரும்பும் நேரம் வந்தது. பிரியாவிடை பெறும் போது ஃபான் ஷு, ஷாங் ஷாவிடம், " இன்னும் இரண்டு ஆண்டுகள் கழித்து உன்னை நான் நேரில் சந்திக்க வருவேன்" என்று கூறினான். எனவே இருவருமாக சேர்ந்து எப்போது சந்திக்கலாம் என்று ஒரு நாளை தீர்மானித்து பிரிந்து சென்றனர்.
இரண்டு ஆண்டுகள் கழிந்தது, இருவரும் ஒப்புக்கொண்ட நாளும் நெருங்கியது. ஷாங் ஷாவ் தன் தாயாரிடம், விருந்தினர் ஒருவருக்காக உணவெல்லாம் தயாரிக்குமாறு கூறினான். ஷாங்கிடம் விடயத்தை கேட்டறிந்துகொண்ட அவனது தாயார், "நீ உன் நண்பனை இரண்டு ஆண்டுகளாக சந்திக்கவேயில்லை, அவனும் நீண்ட தொலைவில் இருக்கிறான். அவன் வருவதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன் சொன்னதை எப்படி நீ ஆழமாக நம்பமுடியும்" என்று கேட்டாள். அதற்கு ஷாங், "ஃபான் மிகவும் நம்பகமானவன். அவன் எப்போதும் தன் வாக்கை மீறமாட்டான்" என்று கூறினான். இதைக் கேட்ட அவனது தாயார், அவர்களுக்காக சுவையான திராட்சை மது தயாரிப்பதாக கூறினாள்.
குறிக்கப்பட்ட நாளும் வந்தது. சொன்னபடியே ஃபான் ஷு ஷாங் ஷாவின் வீட்டுக்கு வந்தான். இருவரும் அலவளாவி மகிழந்தனர். ஷாங் வீட்டினரிடம் அன்பாக பேசி, மகிழ்ச்சியாக பொழுபோக்கி, திராட்சை மது அருந்தி விருந்துண்டபின் ஃபான் ஷு புறப்பட்டான். நாட்கள் கழிந்தன, ஷாங் நோய்வாய்ப்பட்டான். அவனை தாக்கிய நோயும், மரணத்தை நிச்சயித்த நோயாய் தீவிரமானது. அவன் வாழ்ந்த இடத்தைச் சேர்ந்த அவனது நண்பர்கள் ஷு ஜுன்ஷாங்கும், யின் ஷுஷெங்கும் அவனை இரவும் பகலும் கன்விழித்து கவனமுடன் பார்த்துக்கொண்டனர். நோயின் தீவிரம் உக்கிரமடைந்து, மரணத்தின் விளிம்பில் இருந்த ஷாங் தன் நண்பர்கள் இருவரிடமும், "என் ஆருயிர் நண்பனை இன்னும் ஒருமுறை பார்க்க முடிந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்" என்று பெருமூச்சுடன் கூற, அவனது நண்பன் யின், "உன்னை நாங்கள் இருவரும் எங்களால் இயன்ற வரை நன்றாக கவனித்துக்கொண்டிருக்கிறோம். இதை விட உனக்கு ஆருயிர் நட்பு கிடைக்குமா?" என்று கேட்டான்.
அதற்கு, ஷாங் " நீங்கள் என் வாழ்நாள் முழுதுமான நண்பர்கள். ஆனால் ஃபான் ஷு, மரணத்திலும் என் நண்பன்" என்று கூறினான். பின் ஷாங் இறந்தான். இதற்கிடையில் ஷாங் ஃபான் ஷுவின் கனவில் தோன்றி தான் இந்த நாளில் இறந்தது பற்றியும், குறிப்பிட்ட நாளில் அடக்கம் செய்யவுள்ளது பற்றியும் கூறி "ஜூ ச்சிங், நீ என்னை மறக்காமல் இருந்தாய், இனி உன்னை நான் மறுபடி எப்போது பார்ப்பேன் என்று கலக்கத்துடன் கூறினான். கண்விழித்து பார்த்த ஃபான் ஷு கவலையடைந்து நண்பன் இறந்த சோகத்தில் அழுதான். பின் துக்கம் அனுசரித்தவனாய், ஷாங்கின் அடக்கத்துக்கு குறித்த நாளில் அங்கே சென்றான். ஆனால் அவன் அங்கு சென்று சேர்வதற்குள் இறுதிச் சடங்குகள் ஆரம்பிக்கப்பட்டன. ஊர்வலம் அடக்கம் செய்யப்படும் கல்லறையை அடைந்த பின், சவப்பெட்டியை அசைக்கமுடியவில்லை. ஷாங்கின் தாயார் சவப்பெட்டியில் கையை வைத்து ஓசையெழுப்பி, "நீ எதையாவது எதிர்பார்த்து இருக்கிறாயா?" என்று கேட்டபடி சிறிது நேரம் பெட்டியை அசைக்காமல் இருக்கும்படி கூறி காத்திருக்கச் செய்தாள். அப்போது ஃபான்ஷூ குதிரையில் வந்திறங்கினான். அருகில் வந்து சவப்பெட்டி முன் அமர்ந்து அழுதான். பின் "நண்பனே, நீ இப்போது செல். இறப்பால் நாம் பிரிகிறோம். இனி வெவ்வேறு வழிகளில் நம் பயணம் தொடரும். சென்று வா" என்று அழுதுகொண்டே இறந்த தன் நண்பனுக்கு விடைகொடுத்தான். பின் சவப்பெட்டியை கட்டியிருந்த கயிற்றை அவன் அவிழ்க்க, சவப்பெட்டி நகரத்தொடங்கியது. ஃபான் ஷி அடக்கம் முடித்து, கல்லறையில் மரக்கன்றுகளை நட்ட பின், அவ்விடத்திலிருந்து புறப்பட்டுச் சென்றான்.
|