அண்மையில் சீனச் சிச்சுவான் மாநிலத்தின் வென்ச்சுவான் மாவட்டத்தில், ரிக்டர் அளவையில் 7.8 ஆகப் பதிவான கடும் நிலநடுக்கம் நிகழ்ந்தது. இதற்கு பின், சர்வதேசச் சமூகமும் வெளிநாட்டிலுள்ள சீனர்களும் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு நிதியையும் பொருட்களையும் வழங்கி வருகின்றனர்.
ரஷியாவின் 3வது தொகுதி நிவாரண உதவிப் பொருட்கள் இன்று சீனாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இன்று இரவு சீனாவுக்கு நிவாரண உதவிப் பொருட்களை மீண்டும் அனுப்ப ரஷியா திட்டமிடுகிறது. நேற்று, ஸ்பெயினும் பாகிஸ்தானும் சீனாவுக்கு வழங்கிய உதவிப் பொருட்கள் செங்து நகரைச் சென்றடைந்தன. ஜப்பான், ரஷியா, தென் கொரியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சிறப்பு மீட்புதவிப் பணியாளர்கள் நேற்று தொடர்ந்து பாதிக்கப்பட்ட பிரதேசங்களை சென்றடைந்து, மீட்புதவிப் பணியை உடனடியாக மேற்கொண்டனர். கடும் நிலநடுக்கம் நிகழ்ந்ததும், சீன அரசு மேற்கொண்ட வேகமான பயனுள்ள பேரிடர் நீக்க பணியை, ஐ.நா தலைமைச்செயலாளர் பான் கி மூன் வெகுவாக பாராட்டினார். சீனாவுக்கு ஐ.நா.வின் மைய அவசர நிதியிலிருந்து 70இலட்சம் அமெரிக்க டாலரை வழங்கவும், அவர் அறிவித்தார்.
தவிர, உலக வங்கியும் ஆசிய வளர்ச்சி வங்கியும் முறையே சீனாவுக்கு 15இலட்சம் மற்றும் 16இலட்சத்து50ஆயிரம் அமெரிக்க டாலர் நிதியுதவியை வழங்கும். அதே வேளையில், சீனாவுக்கு உடனடி கடனுதவி வழங்குவதோடு, இழப்பு மற்றும் மறுசீரமைப்பில் சீன அரசு மதிப்பீடு செய்வதில் உதவி அளிக்க இவ்விரு வங்கிகளும் விரும்புகின்றன. இந்தியா, துருக்கி,தாய்லாந்து முதலிய நாடுகளும் சர்வதேச அமைப்புகளும் சீனாவுக்கு உதவி வழங்குவதாக முறையே அறிவித்தன.
அதே வேளையில், உலகின் பல்வேறு பகுதிகளில் வாழ்கின்ற சீனர்களும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் கவனம் செலுத்தி, ஆக்கப்பூர்வமாக நிதியுதவியை வழங்கியுள்ளனர்.
|