சின் வம்சக்காலத்தில் வூசிங் என்ற இடத்தில் ஒரு மனிதன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு இரண்டு மகன்கள். வயலில் தனது தந்தையோடு இணைந்து இந்த இரண்டு பேரும் உழைத்தனர். ஆனால் தந்தையோ எப்போதும் அவர்களை வசை பாடுவதும், அடிப்பதும், துரத்துவதுமாக இருந்தார். இதை ஒரு நாள் இரண்டு மகன்களும் தமது தாயிடம் முறையிட்டனர். தந்தையார் தம்மை அடிப்பதையும், உதைப்பதையும், கண்டபடி திட்டுவதையும் மகன்கள் சொல்லக் கேட்டு வியப்படைந்தாள் அந்த தாய். தன் கணவன் வீடு வெளியே சென்று திரும்பியதும் அப்படி மகன்களிடம் நடந்துகொண்டதற்கான காரணம் என்ன என்று கேட்க, கணவன் திகைப்படைந்து, தனது உருவத்தில் ஏதோ பேய்தான் நடமாடுகிறது என்று கூறி அந்த பேய் மறுபடி தோன்றாமலிருக்க வாளால் அதை வெட்டிக் கொல்லும்படி தனது மகன்களிடம் கூறினான்.
பின்னர் தனது மகன்களை ஒருவேளை அந்த பேய் அடித்து கொன்றால் என்ன செய்வது என்ற யோசனையில் தானே வயலுக்கு சென்றார் தந்தை. அந்தோ பரிதாபம், தந்தை சொன்னதை கேட்ட பிள்ளைகள் வயலில் இருந்த தங்கள் தந்தையை தந்தை உருவில் இருக்கும் பேய் என்றெண்ணி வெட்டிக் கொன்று புதைத்தனர். தந்தையின் உருவிலிருந்த பேயோ, உண்மை தந்தையாக வீட்டுக்கு சென்று தன் மகன்கள் பேயைக் கொன்றதை குடும்பத்துக்கு சொன்னதாம். மாலை வீடு திரும்பிய மகன்கள் இருவரும் தாம் செய்த செயலுக்கு தம்மையே பாராட்டி மகிழ்ந்தனர்.
உண்மை அறியாமல் இப்படியே வாழ்க்கை ஓடியது. பேய் உண்மையான ஆள் போல் நடித்துக்கொண்டிருந்தது. ஓராண்டு கழிந்த நிலையில் ஒருநாள் ஒரு சாமியார் இந்த வீட்டின் வழியாக சென்றபோது, இந்த இரு மகன்களிடம் அவர்களது தந்தையிடம் ஒரு கெட்ட ஆவி சூழ்ந்த நிலை காணப்படுவதாக கூற, மகன்கள் தந்தையிடம் சென்று அதைக் கூறினர். தந்தை உருவிலிருந்த பேய் கோபப்பட மகன்கள் அந்த சாமியாரை விரட்ட வெளியே வருவதற்குள் சாமியார் மந்திரங்கள் ஓதியபடி வீட்டில் நுழைந்தார். பேய் ஒரு பூனையாக மாறியது. பூனையாக மாறியதை கண்டதுதாம் தாங்கள் தம் தந்தையை இந்த பேய் என்று கொன்றோம் என்ற உண்மை இருவருக்கும் விளங்கியது. பூனையை பிடித்து கொன்ற மகன்கள் தங்களது தந்தைக்கு மீண்டும் இறுதிச் சடங்கை முறையாக நிறைவேற்றினர். ஒரு மகன் தன் உயிரை மாய்த்துக்கொண்டான். அடுத்தவன் கோபமும், தான் செய்த தவறான செயலால் ஏற்பட்ட மன வருத்தமும் வாட்டி இறந்தான்.
|