நான் ஈஸ்வரி. சீனாவின் ஆன் குவெய் மாநிலத்தைச் சேர்ந்தவர். 17வது வயதில், நான் சீன செய்தித் தொடர்புப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழியை 4 ஆண்டுகளாகப் படித்தேன். படித்து முடித்த பின், எனது ஆசிரியர் சுந்தரனின் ஊக்கத்துடன், சீன வானொலி நிலையத்தின் தமிழ்ப் பிரிவில் சேர்ந்தேன். தமிழ் மொழி மூலம் பணிபுரிவது, எனது கனவாகும். தமிழ் ஒலிபரப்பு தொடங்கிய 45வது ஆண்டு தருணத்தில், நான் இதில் வேலை செய்வதில், பெரும் மகிழ்ச்சியடைகிறேன்.
இதுவரை, நான் 8 திங்களாகப் பணி புரிந்துள்ளேன். கடந்த 8 திங்களில், தமிழ் பிரிவிலுள்ள ஆசிரியர்களின் உதவியுடன், நிகழ்ச்சி தயாரிக்கவும், பேட்டி காணவும் கற்றுக்கொண்டேன். புதிய பணி என்பதால், சில எதிர்ப்பராத சிக்கல்களை அனுபவிக்கின்றேன். எனவே மேலும் அதிக முன்னேற்றம் காண வேண்டும்.
நண்பர்களே, ஒவ்வொரு திங்கள்கிழமையிலும், மக்கள் சீனம் நிகழச்சியில் எனது ஒலியை நீங்கள் கேட்கலாம். புகழ் பெற்ற பாடகி சின்னப்பொன்னு உள்ளிட்ட சில தமிழரை, நான் பேட்டி கண்டேன். தமிழ் நாடு பற்றிய அவர்களின் பாராட்டுகளைக் கேட்ட பின், தமிழ் நாட்டுக்குச் செல்ல பயணம் செய்யும் எனது ஆவல் அதிகரித்துள்ளது. நேயர் நண்பர்களுக்கு பல்வேறு துறையிலான சீனாவின் வளர்ச்சிகளை அறிமுகப்படுத்துவதில், பெரும் மகிழ்ச்சியடைகின்றேன்.
கடந்த 45 ஆண்டுகளில், தமிழ் பிரிவின் ஆசிரியர்களின் பணிகளையும் எழுச்சியையும் கற்றுக்கொண்டு, மேலும் சிறந்த நிகழ்ச்சிகளைத் தயாரிப்பது, எனது எதிர்காலத் திட்டமாகும்.
தமிழ் மொழியிலும், திராவிட நாகரிகத்திலும் எனக்கு அதிக ஆர்வம் உண்டு. இப்போதும், நான் தொடர்ந்து அவற்றைப் படிக்கிறேன். நேயர்கள் எனக்கு அதிக ஆலோசனைகளை வழங்குவதை நான் பெரிதும் விரும்புகிறேன்.
|