சீன மொழியில் Shang xie qi shou என்றால் கைகளை உயர்த்தி இறக்குவது என்று பொருள். இந்தச் சொற்றொடரின் பின்னணியிலுள்ள ஒரு கதையையும், அதன் உண்மையான பொருளை இப்போது பார்க்கலாம். கி.மு 547ம் ஆண்டில், ச்சு நாடு ஷெங் நாட்டின் மீது படையெடுத்தது. ச்சு நாட்டு படைத்தளபதிகளில் ஒருவனான ச்சுவான்ஃபெங் ஸ்யு, ஷெங் நாட்டு படைத்தளபதிகளில் ஒருவனான ஹுவாங் ஸியே என்பவனை கைப்பற்றினான். ஆனால் ச்சு நாட்டு இளவரசன் வெய் ஷெங் நாட்டு படைத்தளபதி ஹுவாங் ஸியேவை கைப்பற்ற தானே காரணம் என்று கூறினான். எனவே இந்த உரிமை கோரல் பிரச்சனையை ச்சு நாட்டின் மற்றொரு படைத்தளபதியான போ ஷௌலியிடம் கொண்டு சென்று இணக்கம் செய்ய முறையிட்டனர். இளவரசனின் கூற்றையும், தனது சக படைத்தளபதியின் கூற்றையும் கேட்ட போ ஷௌலி, இதற்கு தீர்வு, பிடிபட்ட கைதியான ஷெங் நாட்டு படைத்தளபதி ஹுவாங் ஸியேவையே கேட்பதுதான் என்றான். எனவே, கைதியை கொண்டு வந்து நிறுத்தினர். நடுவராக இருந்து இந்த பிரச்சனையை தீர்க்க முற்பட்ட போ ஷௌலி, கைதியை பார்த்து, தந்து கையை உயர்த்தி காட்டி, "இதுதான் இளவரசர் வெய், எமது அரசரின் மதிப்புமிக்க சகோதரன்" என்று கூறினான். பிறகு தனது கையை கீழே தாழ்த்த வைத்த நிலையில், "இதுதான் ச்சுவான்ஃபெங் ஸ்யு, ஏதோ ஒரு சிறிய பிரதேசத்தின் அதிகாரி" என்றான். பிறகு கைதியான ஷெங் நாட்டு படைத்தளபதி ஹுவாங் ஸியேவை நோக்கி, இப்போது சொல் உன்னை யார் கைப்பற்றியது என்று கேட்டான். நடுவராக நின்ற போ ஷௌலியின் கையால் உணர்த்திய குறிப்பை புரிந்து கொண்ட ஹுவாங் ஸியே, "சண்டையில் நான் இளவரசரை எத்ரிகொள்ள நேரிட்டது, அவரோடு சண்டையிட்டு தோல்வியடைந்தேன்" என்று கூறினான். ஆக, ஹுவாங் ஸியேவை கைப்பற்றிய பெருமை இளவரசனுக்கு கிடைத்தது. பிற்காலத்தில், Shang xie qi shou கைகளை உயர்த்தி இறக்குவது என்ற சொற்றொடர், தந்திரங்களை நாடுவதையும், ஏமாற்றுதல் மற்றும் சூழ்ச்சியில் துணை நிற்பதையும் மறைமுகமாக குறிப்பிட பயன்பட்டது.
|