• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-12-24 15:29:45    
நடு இலையுதிர் கால திருவிழா

cri
விழாக்களும் விருந்துகளும் இல்லாத நாடுகளே இல்லை, சமூகங்களே இல்லை. ஒரு சமூகத்தின் பண்பாட்டின் வேரோடு ஊன்றிக்கிடந்து, அச்சமூகத்தின் மக்களுடையை ஒற்றுமையை, மகிழ்ச்சியை, பகிர்தலை அழகாக வெளிப்படுத்துபவை விழாக்கள்தான்.
சீனாவில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. விடுமுறை, விருந்து, புத்தாடை, மகிழ்ச்சி என்பதாக மட்டுமே அமையாமல் பண்டைய பண்பாட்டின் தொடர்ச்சியை, நீள்ச்சியை உணர்த்தும் இந்த விழாக்களில் ஒன்றுதான் நடு இலையுதிர் கால திருவிழா அல்லது நிலவுத் திருநாள். சீனச் சந்திர நாள்காட்டியில் 8வது மாதம், 15ம் நாளன்று, இலையுதிர்காலத்தில் நடுப்பகுதியில் கொண்டாடப்படுவதால், நடு இலையுதிர்காலத்திருவிழா என்று பெயர் பெற்ற இந்த விழா குடும்பங்கள் ஒன்று சேர்ந்து கொண்டாடி மகிழும் ஒரு நாளாக போற்றப்படுகிறது. குடும்பத்தினர் அனைவரும் கூடி மகிழ்வதை பெளர்ணமியாய் சிரிக்கும் நிலவின் முழுமை உணர்த்துகிறது. நிலவுத் திருநாளின் மாலைப்பொழுதில், மக்கள் தங்களது குடும்பத்தோடு ஒன்று கூடி, அழகான விளக்குகளை ஏற்றி, இனிப்புகளை உண்டு, பெளர்ணமியாய் கண் சிமிட்டும் முழுநிலவின் அழகை ரசிப்பது வழமை.
பொதுவாக எல்லா திருவிழாக்களுக்கும், பண்டிகைகளுக்கும் பின்னணியில் ஏதாவது ஒரு கதை இருக்கும் அல்லவா. நிலவுத்திருநாளோடு தொடர்புடைய கதையாக நம்மில் பலருக்கும் தெரிந்த ஒரு கதை ச்சங் அர் பற்றிய கதை. கடந்த ஆண்டு நிலவுத்திருநாளன்றைய சிறப்பு நிகழ்ச்சியில் ச்சங் அரின் கதையை நாம் கூறியிருந்தோம். இந்த ச்சங் அர்ரின் கதையே மூன்று நான்கு விதங்களில் கூறப்படுவதுண்டு.
இன்றைய நிகழ்ச்சியில் நிலவுத்திருநாள் அல்லது நடு இலையுதிர்கால திருவிழாவோடு தொடர்புடைய வேறு கதைகளை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம்.
சீனப் பழங்கதைகளின் படி, ஹான் வம்சக்காலத்தில் ஷிஹெ என்ற இடத்தில் வாழ்ந்தவன் வூ காங். அவன் சாகாவரம் பெற்ற ஒருவரிடம் உதவியாளனாய் இருந்து, பின் சாகாவரம் பெறும் வித்தையை, ரகசியத்தை தெரிந்துகொண்டானாம். பின் சாகாவரம் பெற்றவனாய் சொர்க்கத்தில் நுழைந்தான் வூ காங். ஒரு நாள் அவன் சாகாவரம் பெற்றவர்கள் செய்யக்கூடாத ஒரு தவற்றை செய்துவிட்டான். உடனே அவனுக்கு அவனது குரு தண்டனை விதித்தார். தண்டனை என்ன தெரியுமா?
சொர்க்கத்திலிருந்து வெளியேறி நிலவுக்கு செல்லவேண்டும். அங்கே உள்ள ஒரு செர்ரி மரத்தை வெட்டவேண்டும். மரத்தை வெட்டுவது தண்டனையா என்றுதானே கேட்கத் தோன்றுகிறது. வூ காங் வெட்ட வேண்டிய மரம் நிலத்தில் குவாங்ஹான் அரண்மனைக்கு முன் இருந்தது. அதன் உயரம் ஒன்றைரை கிலோ மீட்டருக்கு மேல். மரம் எவ்வளவு உயரமாக இருந்தால் என்ன கோடரி கொண்டு கிழே வெட்டினால் சாயத்தான் வேண்டும் அல்லவா? ஆனால் இந்த மரம் மட்டும் எத்தனை முறை வெட்டி சாய்த்தாலும் மீண்டும் அழகாக விண்ணுயர எழுந்து நிற்கும். ஆக தண்டனையாக இந்த மரத்தை வெட்டிச் சாய்க்கவேண்டும் என்பது என்றுமே நிறைவேற முடியாத செயலாக நீடித்தது. ஆயிரம் ஆண்டுகள் கடந்த பின்னும் அந்த மரம் வெட்டி வீழத்தப்பட முடியாமல் நிலவின் முதுகில் நின்றுகொண்டிருக்கிறதாம். வூ காங்கும் விடாமல் வெட்டிக்கொண்டிருக்கிறானாம். ஆக சாகாவரம் பெற்றவனாயிருந்தும் தவறிழைத்ததால் கடுமையான ஆனால் பயனே இல்லாத வேலையை தண்டனையாக பெற்றான் வூ காங்.
நிலவில் சாயாத மரத்தை வெட்டும் வூ காங்கின் கொடுமையான தண்டனை பற்றிய கதையை அடுத்து கொஞ்சம் போராட்ட எழுச்சியுடன் கூடிய கதை ஒன்று. இதுவும் நிலவுத்திருநாளோடு, நடு இலையுதிர்காலத் திருவிழாவோடு தொடர்புடைய ஒரு பழங்கதையாகும்.
நிலவுத்திருநாளில், மக்கள் இனிப்புகளை உண்டு மகிழ்கின்றனர். அதிலும் சிறப்பாக மூன் கேக் எனப்படும் நிலவு போன்ற வட்ட வடிவ கேக், இந்த விழாவின் சிறப்பு இனிப்பு வகையாகும். இந்த நிலவு கேக் தோன்றியதன் பின்னணியை கூறுகிறது, அடுத்த கதை.