இன்றைக்கு பெய்ஜிங், ஷாங்காய் போன்ற மாநகரங்களில் பல லட்சம் திருமணமாகத பெண்கள் இருக்கின்றனர். ஆயிரமாண்டுகால ஷியாங்ச்சின் எனும் நடைமுறையும் இந்த நவீனகாலத்தில் தொடர்கிறது. உண்மையில் சொன்னால் புதுப்பொலிவுடன், மறுவருகை செய்கிறது எனலாம். 2004ம் ஆண்டு முதல் பெரிய பெரிய மாநகரங்களின் பெரிய பூங்காக்களில் ஆண் மற்றும் பெண்ணின் பெற்றோர் கூடி, தங்களது மகன் அல்லது மகளுக்கு ஏற்ற இணையை தேர்ந்தெடுக்க முயல்கின்றனர். தங்களது மகன் அல்லது மகளின் பெயர், வயது, பணி, திருமணத்திற்கு தேவையாக கருதும் அம்சங்கள் போன்ர தகவல்களை தம்மோடு கொண்டுவந்து, தத்தமது பிள்ளைகளுக்கு ஏற்ற இணையை தங்களுக்குள் கலந்து பேசி, இணைப் பொருத்தம் பார்க்கின்றனர், தாங்களே திருமணத்தரகராக ஆன பெற்றோர்.
பெற்றோரு ஒருபுறம் இப்படி பண்டைய வழிமுறையில் தமது பிள்ளைகளுக்கு பொருத்தமான இணையை தேட முயன்று கொண்டிருக்க, நவினமயமாக்க உலகில், துரித உணவுக்கலாச்சாரத்தில் ஊறிப்போன் பிள்ளைகளோ, வேலை, பணிவாழ்க்கை, வாழ்க்கை லட்சியம் என்று அலையும் நேரத்தில் கல்யாணமாகவது, கத்தரிக்காயாவது என்று சிரிக்கின்றனர். ஒரு சிலர், திருமணம் என் சொந்த விருப்பம், பெற்றோர் ஏன் இப்படி அதற்காக தங்களை நொந்துகொண்டு, அலைய வேண்டும் என்று கேட்கின்றனர். தங்களது பிள்ளைகளுக்கு வயதாகிறதே, சீக்கிரம் திருமணம் முடித்து அவர்கள் வாழ்க்கையில் அடுத்த கட்டத்தில் நுழைந்து, பிள்ளை குட்டியாக, குடும்பியாக ஆகவேண்டுமே என்ற பெற்றோரின் சஞ்சலப்பட்டு தவிக்கும் மனதின் ஏக்கம், பிள்ளைகளுக்கு புரிந்தாலும், சில சமயங்களில் பிடிக்காமல் போகிறது. தலைமுறை இடைவெளியும், வாழ்கை மதிப்பீடுகளிலான மாற்றமும்தான் இதற்கு காரணம் எனலாம்.
சரி ஏதோ தனக்கு பிடித்த பெண்ணை தன் மகனோ, ஆணை தன் மகளோ திருமணம் முடிக்கிறேன் என்று சொன்னால், பெற்றோர் நிச்சயம் மகிழ்ச்சியடைத்தானே செய்வார்கள். ஆனால் எப்போது திருமணம் என்பது தனிப்பட்ட முடிவு என்று இன்றைய இளைஞர்கள் சொல்லுவதோடு நில்லாமல் அதற்கு காரணங்களை பட்டியலிடும்போது, நாம் பெற்றோருக்கும் பரிந்து பேசமுடியாது, பிள்ளைகளுக்கும் பரிந்து பேசமுடியாது என்ற நிலையைத்தான் எதிர்கொள்ள நேரிடும்.
காலத்தின் வேகமான வளர்ச்சிக்கு இணங்க இப்போது இளவட்டங்கள் ஸ்பீட் டேட் எனும் வழிமுறையைக்கூட பயன்படுத்தி இணையை தேர்வு செய்கின்றனர். பெய்ஜிங், ஷாங்காய் முதலிய மாநகரங்களில் திருமணத்துக்கு இணைதேடும் இளைஞர்கள் ஓரிடத்தில் அணிதிரண்டு, ஒவ்வொருவருவராக ஒருவர் மற்றவரை தலா 8 நிமிடம் சந்தித்து பேசி, தங்களுக்கு மற்றவருக்கும் பொருத்த இருக்கிறதா, தனக்கு பிடித்தமான நபரா என்பதை தெரிவு செய்யும் முறைதான் ஸ்பீட் டேட்டிங்.
|