
சொர்க்கக் கோயிலினுள்ளே ஒரு விந்தையான இடமுண்டு. உள்ளே அமைந்துள்ள ஒரு வட்ட வடிவ பீடத்தின் நடுவே உள்ள கல், வானுலகக் கல்லின் இதயம் என்றழைக்கப்படுகிறது. இங்கிருந்தபடி அக்காலத்தில் பேரரசர்கள் உரை நிகழ்த்துவார்களாம். உரையென்றால், முக்கியமான நேரங்கள், விழாக்கள் போன்ற சிறப்பான, சடங்கு முறைப்படியான உரையாக அவை இருக்கும். அரச அதிகாரத்தின் அடையாளமாக, கம்பீரமான தோரணையில் பேரரசர் இப்படி உரை நிகழ்த்துகையில், அவர் பேசுவது சன்னமாக இருந்தாலும், கேட்போருக்கு கணீரென்று ஒலிக்கும் பேரரசரின் குரல் செவிகளை நிரப்புமாம். இதற்கு காரணம் இந்த இடத்தில் அமைந்த சுவரில் பட்டு தெறிக்கும் ஒலி, எதிரொலியாக மீண்டும் ஒலிக்க, கம்பீரமான குரல் மக்களுக்கு கேட்டது. இதை பேரரசர்கள் தாங்கள் தியன்ஸு அதாவது கடவுளின் மகன் என்பதை எண்பிக்கும் ஓர் ஆதாரமாக கூறினர். இந்த விந்தையான அம்சம் தாங்கள் வல்லமை பெற்றவர்கள், எனவே தங்களுக்கு கீழ்பணியாவிட்டால், கடவுளின் எதிரியாக மாறக்கூடிய ஆபத்து உள்ளது என மக்களை நம்பச்செய்ய உதவியது. ஆனால் உண்மையில் இதன் பின்னணியில் இப்படி பெரிய கடவுளின் கொடை எனறு சொல்லக்கூடிய விந்தையேதுமில்லை. அறிவியல் ரீதியான காரணங்களை ஆய்வு செய்தால், இந்த வானுலகக் கல்லின் இதயத்திற்கு அறையின் சுவர்களுக்குமிடையிலான அமைவால் பேசும்போது ஒலி, சுவர்களின் பட்டு எதிரொலிக்க, பேச்சொலியும், எதிரொலியும் சேர்ந்து கேட்க குரல் கணீரென்று இருந்தது. சுவர்களுக்கும் இந்த கல்லுக்குமிடை தூரம் மிகக் குறைவே என்பதால் உண்மை குரலொலியும் அதன் எதிரொலியும் தெளிவாக பிரித்தறியமுடியாமல் போக, இரு ஒலிகளும் இணைந்து, சன்னமான குரலும் கம்பீரமாக தொனிக்கும்படி செய்து விடுகின்றன. மக்களும் இதை கேட்டு, அடடே இதென்ன விந்தை, பேரரசர் உண்மையிலேயே கடவுள் அம்சம் கொண்டவர்தான் போல என்று எண்ணினர்.
பின்னாளில் இந்த எதிரொலி எழுப்பும் சுவர்களை பாதுகாக்க மற்றுமொரு சுற்றுச் சுவர் எழுப்பப்பட்டது. பின்னாளில் பேரளவுப் பயணிகளின் வருகை உள்ளிட்ட காரணங்களால் அந்த இரண்டாவது பாதுகாப்புச் சுவர் சீரழிந்தது.
இன்றைக்கு உள்ளே சென்று பார்க்கும் பயணிகள் இந்த எதிரொலி விந்தையை பெரிதும் அனுபவித்து கேட்க முடிவதில்லை, காரணம், அதிகமான எண்ணிக்கையில் பயணிகள் கூடும்போது, அவர்கள் எதிரொலியை எழுப்பும் சுவர்களை மறைந்து நின்றுவிடுவதுதான். ஆனால், தனியே எப்போதாவது கூட்டமில்லாத நேரத்தில் இந்த வானுலகக் கல்லின் இதயம் எனப்படும் கல்லை சுற்றிய வட்ட பலிபீடத்தின் அருகே நின்றபடி பேசினால், நம் குரலொலி சுவர்களில் பட்டு எதிரொலியாக எழும்பி, எதிரொலியும், நம் குரலொலியும் இணைந்து கம்பீரமாக ஒலிப்பதை கேட்பது, சுவையான அனுபவம் என்கிறார்கள்.
|