ஒப்புக் கொள் என்று சொல்வது போல, இடுங்கிய ஈர்க்குச்சி கண்களை அகல விரித்தபடியே சுவாங்கைப் பார்த்தார் ஏழாவது முதலாளி. நிலைமை மோசமாவதை அய்கு புரிந்து கொண்டாள். கடலோரக் குடும்பங்கள் எல்லாம் பயந்து மரியாதை செலுத்தும் தனது தந்தை இங்கே வாய்பேச முடியாமல் நிற்பது கண்டு திகைத்தாள். இதை எதிர்பார்க்கவில்லை. ஏழாவது முதலாளி ஒன்றும் அவள் நினைத்தது போல பயங்கரமான ஆள் அல்ல. அன்பான முதியவராகத் தெரிந்தார்.
"ஏழாவது முதலாளிக்கு தெரியாதது ஒண்ணுமில்லே. விவரம் தெரிஞ்சவர்" என்று துணிச்சலாகப் பேசத் தொடங்கினாள். "முதலாளி எங்களைப் போல பட்டிக்காட்டு ஆள் இல்லை. எனக்கு வந்திருக்கிற கொடுமையை யார்கிட்ட போயி சொல்ல முடியும். அதான் ஏழாவது முதலாளிகிட்ட வந்துருக்கேன். கல்யாணம் ஆன நாளில இருந்து நல்ல பொண்டாட்டியாத்தான் இருந்துருக்கேன். தலையைக் குனிஞ்சுக்கிட்டுத்தான் வெளியே போவேன், உள்ளே வருவேன். பொண்டாட்டிங்கிற முறையில் ஒரு கடமையும் விட்டு வைக்கலே. ஆனா அவங்க ஒவ்வொண்ணுலயும் குத்தம் சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க, ஆளாளுக்கு நாட்டாமை பண்றாங்க. நரி வந்து சேவலை தூக்கிட்டுப் போச்சு. அதுக்கு நான் என்ன பண்ண முடியும்? கோழிக் கூண்டை மூடலேன்னு எம்மேலே குத்தம் சொன்னா எப்படி? தவிட்டுல கலந்திருக்கிற அரிசியைப் பொறுக்கறதுக்காக அந்த நாமாப்போன கோழிக்கூண்டு திறந்தது. ஆனால் இந்த சின்னப் பிசாசுக்கு நல்லதும் தெரியாது, கெட்டதும் தெரியாது. என்னெ கன்னத்துல அறைஞ்சுட்டான்."
ஏழாவது முதலாளி அவளை ஏறிட்டுப் பார்த்தார். 1 2
|