யேல் பல்கலைக்கழகக் குழுவின் பெருஞ்சுவர் பயணம்
சீனத் தலைமை அமைச்சர் வென்சாபாவ் அவர்களின் அழைப்பை ஏற்று, அமெரிக்காவின் பழம்பெரும் யேல் பல்கலைக்கழகத்தின் மாணவர்களும் பேராசிரியர்களுமாக 100 உறுப்பினர்களைக் கொண்ட குழு, கடந்த மே திங்கள் 19 ஆம் நாள் சீனப்பெருஞ்சுவரின் பதாலிங் பகுதியில் பயணம் மேற்கொண்டது. அக்குழுவில் இடம் பெற்றிருந்த யேல் பல்கலைக்கழகத்தின் தலைவர் ரிச்சர்ட் லெவின், பெருஞ்சுவரின் உயரமான பகுதிக்கு விரைந்து சென்று, அங்கிருந்த கண்காணிப்பு கோபுரம் ஒன்றின் மீது ஏறினார். அப்போது எதிர்ப்புறம் அமைக்கப்பட்டிருந்த 2008 ஆம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான, 'ஓரே உலகம், ஒரே கனவு' என்ற வாசகம் எழுதப்பட்ட பதாகை தெள்ளத் தெளிவாகக் கண்டு உற்சாகமடைந்தார். ஏழாவது முறையாக சீனாவுக்கு வருகை தந்த போதிலும், முதல் தடவையாக சீனப் பயணம் மேற்கொண்டவர் போல், பெருஞ்சுவர் பகுதியில் விற்பனை செய்யப்பட்ட இதழ்கள் மற்றும் கைவினைப் பொருட்களை அவர் ஆர்வமுடன் வாங்கினார். தமது துணைவியாருடன் வந்திருந்த ரிச்சர்ட் லெவின், யேல் பல்கலைக்கழகக் குழுவின் சீனப் பயணம், சீனாவைப் பற்றி மேலும் புரிந்து கொள்ள மாணவர்களுக்கு சிறந்த வாய்ப்பை வழங்கும் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பின்னர், பெருஞ்சுவர்ப்பகுதியின் அடிவாரத்தில் அமைக்கப்பட்டிருந்த Zhan tian you அருங்காட்சியகத்தைக் குழுவினர் பார்வையிட்டனர். யேல் பல்கலைக்கழகத்தின் மருத்துவத் துறை மாணவரான ஜேம்ஸ் என்பவர், அருங்காட்சியைப் பார்வையிட்டதன் மூலம், சீன இருப்புப்பாதைத் துறையின் தந்தை எனப் போற்றப்படும் சான் தியன் யுவைப் பற்றிய சில தகவல்களை அப்போதுதான் முதன்முறையாக அறிந்து கொண்டார். Zhan tian you யேல் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று பட்டம் பெற்றவர். தாய்நாடு திரும்பிய பின், இருப்புப்பாதையின் கட்டுமானத்தில் ஈடுபட்டவர். அவர் தலைமையில் தான், சீனாவின் முதலாவது இருப்புப்பாதை கட்டிமுடிக்கப்பட்டது. அதை அறிந்த கொரிய மாணவர் லியு சான்மெய் என்பவர், 'நூறு ஆண்டுகளுக்கு முன்பே யேல் பல்கலைக்கழகம் சென்று கல்வி பயின்ற சான், மாபெரும் மனிதர் எனவும், அவரை நினைத்து பெருமைப்படுவதாகவும்' குறிப்பிட்டார்.
1 2
|