"ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி" ஆலங்குச்சி, வேலங்குச்சி, பேப்பங்குச்சி என பற்பசையும், பல்துலக்கும் தூரிகையும் இணைந்த இயற்கை நமக்களித்த அன்பளிப்புகளை புறக்கணித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்றைக்கு கிராமப்புறங்களில் கூட நவநாகரீக பாணியில் பற்பசைகளும் பல் துலக்கும் தூரிகைகளும் பரவலான பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. மாநகரத்து மகாதேவன் பயன்படுத்துவதையே மாந்தோப்பு கிராமத்து மாடசாமியும் பயன்படுத்துகிறார் என்ற சமநிலை, சமத்துவத்தை பற்றி கொஞ்சம் மகிழ்ச்சியடையலாம். ஆனால், மகாதேவதுக்குத்தான் நவநாகரீக வாழ்க்கை மோகம், தகுநிலை நிர்ப்பந்தம், நம்ம மாடசாமிக்கு அதெல்லாம் இல்லையே, இயற்கை அளித்த அருங்கொடைகளை அவர் ஏன் ஒதுக்குகிறார் என்ற கரிசனையே அதிகம் மேலிடுகிறது.
அப்படியென்றால், மாநகரத்துவாசிகள் பளீரிடும் பற்கள் தெரிய சிரிப்பதும், கிராமத்து மக்கள் கரையேறிய பற்களுடன் தெரிவதும்தான் எனக்கு பிடிக்குமா? என்ற கேள்வி எழும். நியாயமான கேள்விதான். இன்றைக்குள்ள பன்னாட்டு நிறுவனங்களின், பல விதமான நுகர்வுப்பொருட்கள், இயற்கையில் இருந்து நாம் நேரடியாக பயன்படுத்திய, பதப்படுத்து பயன்படுத்திய பொருட்களைவிட சில அம்சங்களில் மேம்பாடு கொண்டவை என்பதும் உண்மைதான். அதனால்தான் ஆலங்குச்சி, வேலங்குச்சி, வேப்பங்குச்சி, கரித்தூள் என பல்துலக்க் பயன்படுத்தப்பட்ட பொருட்களும், தலைக்கு குளிக்க சீயக்காய்த்தூளும் இன்றைக்கு பயன்படுத்தப்படாத நிலை. எல்லாமே வேகமாகிப்போன உலகில் , அவசரமாகிப்போன நமது வாழ்க்கையில் யார் இயற்கையோடு மெனக்கெடுவது. எல்லாமே ரெடிமேட், நேரடியாக பயன்படுத்த ஆயத்த நிலையில் கிடைக்கும்போது, எதற்கு குச்சியை வைத்து பற்களை துலக்கவேண்டும். மேலும் பற்பசைகளும் இன்னபிற பற்களை மினுமினுக்கச்செய்யும் பொருட்களும்தான் சந்தையில் கிடைக்கின்றனவே, அவற்றை வாங்கி பயன்படுத்தி பளீரிடும் புன்னகைக்கு சொந்தக்காரர்களாகலாமே.
1 2 3
|