மலிவான மடிக்கணினி


வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றான இந்தியா பொருட்களை விலைமலிவாக மக்களிடம் கொண்டு சேர்க்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அண்மையில் ஒரு இலட்சம் ரூபாய் அதாவது ஏறக்குறைய 2500 அமெரிக்க டாலர் என்ற விலையில் டாட்டா நிறுவனத்தின் நானோ மகிழுந்து இந்தியாவில் விற்பனைக்கு வந்தது. இம்முயற்சி இவ்வளவு மலிவான விலையில் மகிழுந்தை தயாரிக்க முடியுமா என்று பல நாடுகளை வியக்க வைத்துள்ளது.

இந்நிலையில், கணினிமயமாகும் உலகில் கணினியை எல்லா மக்களுக்கும் பரவல் செய்யும் வகையில் மடிக்கணினி மிக மலிவாக கிடைக்க வழிசெய்யும் திட்டத்தை தற்போது இந்தியா தொடங்கியிருப்பதாக உயர்கல்விக்கான இணை அமைச்சர் டி. புரான்டேஸ்வரி தெரிவித்திருக்கிறார். ஒரு மடிக்கணினியின் விலை எவ்வளவு தெரியுமா? 10 அமெரிக்க டாலர் மட்டுமே. இதனை நனவாக்குவதற்காக ஆய்வுகள் பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்திலும், சென்னையிலுள்ள இந்திய தொழில்நுட்ப கழகத்திலும் நடைபெற்று வருகிறது. உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இம்முயற்சி, "தகவல் தொடர்பு தொழில்நுட்பம் மூலம் கல்வி" என்ற தேசிய திட்டத்தின் கீழ், விலை மலிவான, குறைவான மின்னாற்றல் பயன்படுத்தக்கூடிய பொருட்களின் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தென் பசிபிக் கடற்பரப்பில் உள்ள தீவு நாடான நியுயேயில் (Niue) எல்லா குழந்தைகளும் மடிக்கணினி பெற்றுள்ள முதல் நாடாக, உலகளவில் சாதனை படைக்கும் முயற்சியில் "ஒவ்வொரு குழந்தைக்கும் மடிக்கணினி" திட்டத்தை தொடங்கியுள்ளது. இம்முயற்சியின் தொடக்கமாக அந்நாட்டின் தொடக்க மற்றும் உயர் நிலை பள்ளிகளின் 500 மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. 1 2
|