சிக்கவைத்த காதல்
திருடன் ஒருவன் காதல் வயப்பட்டான். Li என்ற பெயருடைய அவன் தனது காதலிக்கு அன்பை வெளிப்படுத்தும் வகையில் அவள் வந்து சந்திப்பதாக குறிப்பிட்டிருந்த காப்பிக்கடைக்கு வந்து காத்திருந்தான். அப்போது காவலர்கள் அவனது கையில் விலங்கு மாட்டி அழைத்து சென்றனர். ஏதோ பெண் சீண்டல் அல்லது கேலிவதை கொடுமைக்காக கைது செய்யப்பட்டிருப்பான் என்று எண்ணிவிடாதீர்கள். நடந்தது என்ன தெரியுமா? ஒருநாள் தூங்கிக்கொண்டிருந்த பதின்ம வயது பெண்களின் விடுதியினுள் நுழைந்த திருடன் ஒருவன் கத்தியைக்காட்டி மிரட்டி அவர்களிடம் இருந்த விலைமதிப்புள்ள பொருட்களை சூறையாட தொடங்கினான். பயந்துபோன அந்த இளம்பெண்கள் அமைதியாக இருந்தனர். திருடிக்கொண்டிருந்தவனின் கண்கள் அறையில் ஓரத்தில் மிரண்டு நடுங்கிக்கொண்டு அமர்ந்திருந்த பெண்ணின் மேல் விழுந்தது. அந்த முதல் பார்வையிலேயே அவன் காதல் வயப்பட்டான். திருடியப் பொருட்களை எடுத்துசெல்லும்போது அந்த பெண்ணின் செல்லிடபேசி எண்ணை கட்டாயப்படுத்தி பெற்றுவிட்டு சன்னல் வழியாக குதித்து மறைந்துவிட்டான்.
ஒரு வாரம் கடந்த பின்னர் அந்த பெண்ணுக்கு தெரியாத தொலைபேசி எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. நான் உன்னை விரும்புகிறேன். நாம் முன்னால் சந்தித்திருக்கிறோம். நீ மறந்து விட்டாயா? என்று மறுமுனையில் சொல்ல கேட்டவுடன், குரலை இனம்கண்டு கொண்ட அப்பெண் Baoding காவல்துறையிடம் புகார் செய்ய, காவலர்களின் ஆலோசனையின் பேரில் அவனை சந்திக்க விரும்புவதாக அப்பெண் அவனிடம் கூறினாள். அவ்வாறு சந்திக்க குறிப்பிட்டிருந்த இடம் தான் அந்த காப்பிக்கடை. தனது காதல் தேவதையை முதல்முதலாக மனப்பூர்வமாக சந்தித்து தனது அன்பை தெரிவிக்க காத்திருந்த அவனை காவல்துறையினர் கைது செய்தனர். இச்சம்பவம் சீனாவின் Hebei மாநிலத்தில் நிகழ்ந்தது. முதல் பார்வையிலேயே காதல் கொண்ட அவனை அக்காதலே சிக்க வைத்துவிட்டது. 1 2
|