

பொதுவாக திருமணங்களில் ஆடைகள், அணிகலன்களுக்கு எப்படி முக்கியத்துவம் தரப்பட்டதோ, சீனப் பாரம்பரிய திருமணத்தில் மணமக்கள் அணியும் காலணிகளுக்கும் முக்கியத்துவம் தரப்பட்டது. காலணிகள் எப்போது இணையாகத்தானே அணியமுடியும் என்பதால் அது இணக்கத்தை உணர்த்தியது. ஒரு சிலர் திருமண அன்பளிப்பாகக்கூட காலணிகளை தருவதுண்டு. சீனாவில் பல்வகை திருமண காலணிகள் உண்டு. லான்சு காலணி, பாம்பாசின் காலணி, ஷியே காலணி, மணமகன் நடனமாடும் காலணி என அவை பல வகைகளில் கிடைக்கின்றன. காலணியோடு தொடர்புடைய சில வேடிக்கையான சடங்கு அல்லது நடைமுறைகளும் திருமணங்களின் போது இடம்பெறுவதுண்டு. அவற்றில் ஒன்று, மணமகளின் காலணியை திருடுவது. இந்த வேடிக்கையான விளையாட்டில், திருமணச் சடங்கு நடைபெறுவதற்கு முன்பாகவே, திருமணத்திற்கு வரும் விருந்தினர்கள், மணமகளின் காலணியை திருட முயற்சி செய்வார்கள். காலணியை திருட அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யல்லாம் என்பதால், விருந்தினர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இந்த முயற்சியில் இறங்குவர். வெற்றிகரமாக திருடிவிட்டால், அந்த காலணியை பெறுவதற்கு, மணமகள் என்ன செய்யவேண்டும் தெரியுமா? ஒன்றும் செய்யத் தேவையில்லை. ஆமாம். மணமகளின் காலணி அவருக்கு திரும்பக் கிடைக்க, அவளை மணமுடிக்கும் அப்பாவி மணமகன் தான் காலணியை எடுத்தவருக்கு இனிப்புகளோ அல்லது சிகரெட்டோ அல்லது ஏதாவது கொடுத்து காலணியை மீட்டுத் தரவேண்டும். திருமணத்திற்கு பின்பு கணவனின் பணப்பையை மனைவி பதம் பார்க்கப்போகிறாள் என்பதை குறிப்புணர்த்த இந்த வேடிக்கையான விளையாட்டு நடப்படுகிறதோ என்ற ஐயம் எனக்குள் எழுவதை தவிர்க்க இயலவில்லை.
1 2 3
|