சீன உக்ரைன் அரசுத் தலைவர்களின் தொலைபேசி தொடர்பு
2023-04-26 20:28:09

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் ஏப்ரல் 26ஆம் நாள்  உக்ரைன் அரசுத் தலைவர் செலென்ஸ்கியுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார். இரு நாட்டுறவு, உக்ரைன் நெருக்கடி ஆகியவை குறித்து இருதரப்பினரும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

ஷி ச்சின்பிங் கூறுகையில்,

சர்வதேச சூழல் எப்படி மாறினாலும், உக்ரைனுடன் இணைந்து இரு நாட்டு ஒத்துழைப்பை முன்னேற்ற சீனா விரும்புகின்றது. சிக்கலாக மாறி வரும் உக்ரைன் நெருக்கடி  சர்வதேச நிலைமைக்குப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.  பேச்சுவார்த்தையின் மூலம் அமைதியை நனவாக்குவது, உக்ரைன் பிரச்சினை குறித்த சீனாவின் நிலைப்பாடு என்று தெரிவித்தார்.

மேலும், அரசியலின் மூலம் உக்ரைன் நெருக்கடியைச் சமாளிப்பது பற்றிய சீனாவின் நிலைப்பாடு என்ற ஆவணம் ஒன்றை சீனா வெளியிட்டது. பேச்சுவார்த்தை ஒரே ஒரு வழிமுறையாகும். உக்ரைன் நெருக்கடியை அரசியல் முறையில் தீர்ப்பது குறித்து தொடர்புடைய தரப்புகளுடன் ஆழமான தொடர்புகளை மேற்கொள்ள, உக்ரைன் மற்றும் பிற நாடுகளுக்கு யுரேசிய விவகாரத்துக்கான சீன அரசின் சிறப்பு பிரதிநிதியை சீனா அனுப்ப உள்ளது. உக்ரைனுக்கு பல மனித நேய உதவிகளை வழங்கியுள்ள சீனா தொடர்ந்து இயன்ற அளவில் உதவி அளிக்க விரும்புகின்றது என்றும் ஷி ச்சின்பிங் தெரிவித்தார்.

ஷிச்சின்பிங்கின் தலைமையில், சீனா, பல்வேறு அறைகூவல்களைச் சமாளித்து, தொடர்ந்து வளர்ச்சியடையும் என நம்புவதாக செலென்ஸ்கி தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,

ஒரே சீனா என்ற கொள்கையை, உக்ரைன் உறுதியாக பின்பற்றுகின்றது. சீனாவுடன் இணைந்து பன்முகங்களில் ஒத்துழைத்து, உலகின் அமைதியையும் நிதானத்தையும் பேணிக்காக்க விரும்புகின்றது என்றார்.

சீனா அளித்த மனித நேய உதவிக்கு அவர் நன்றி தெரிவித்ததோடு அமைதியை மீட்பதிலும், தூதாண்மை வழிமுறையின் மூலம் நெருக்கடியைச் சமாளிப்பதிலும் சீனா முக்கிய பங்கு ஆற்றுவதற்கும் வரவேற்பு தெரிவித்தார்.