சீனாவில் முதலீடு செய்ய விரும்பும் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் அதிகரிப்பு
2023-04-22 17:16:23

சீன வணிக அமைச்சகம் அண்மையில் வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டின் முதல் காலாண்டில் நாடு முழுவதிலும் நடைமுறையில் பயன்படுத்தப்பட்ட அந்நிய முதலீட்டுத் தொகை 40 ஆயிரத்து 845 கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டின் இதேகாலத்தில் இருந்ததை விட 4.9 விழுக்காடு அதிகரித்துள்ளது. மேலும், புதிதாக நிறுவப்பட்ட அந்நிய முதலீட்டு நிறுவனங்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டி, 25.5 விழுக்காடு அதிகரித்துள்ளது. இதனிடையில், சீனாவில் முதலீடு செய்வது என்பது, உலகளவில் பெரிய ஊடகங்களால் பரபரப்பாக விவாதிக்கப்படும் கருப்பொருளாக உள்ளது.

இவ்வாண்டு முதல், அந்நிய முதலீட்டு நிறுவனங்களின் உயர்நிலை அதிகாரிகள் பலர் சீனாவில் பயணம் மேற்கொண்டுள்ளனர். சீனாவிலுள்ள கடைகளை ஆய்வு செய்வது, நுகர்வோர்களுடன் கருத்துகளைப் பரிமாறிக் கொள்வது, சந்தை விரிவாக்கம் மற்றும் ஒத்துழைப்பு பற்றிய பேச்சுவார்த்தை நடத்துவது உள்ளிட்டவற்றில் அவர்கள் ஈடுபட்டனர்.

உலகளவில் 2ஆவது பெரிய நுகர்வு சந்தையாகவும் முதல் பெரிய இணையவழி சில்லறை விற்பனை சந்தையாகவும் திகழும் சீனா, வெளிநாட்டு முதலீட்டுக்கு மிகப்பெரிய வாய்ப்பாகும். தெற்குச் சீனாவிலுள்ள அமெரிக்க வணிகச் சங்கம் வெளியிட்ட 2023ஆம் ஆண்டு சீன வணிகச் சூழல் அறிக்கையின்படி, கணக்கெடுக்கப்பட்ட தொழில் நிறுவனங்களில் 90 விழுக்காட்டுக்கு மேலான நிறுவனங்கள் சீனாவை முதலீட்டுக்கான முக்கிய இடமாக கருதியுள்ளன. அத்துடன் 75 விழுக்காடு நிறுவனங்கள் சீனாவில் தொடர்ந்து முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளன. ஆலிவர் வைமன் எனும் சர்வதேச ஆலோசனை நிறுவனத்தின் நிர்வாக பங்குதாரர் பென் ஸிம்ப்பென்டோர்பெர் பேட்டியறிக்கை ஒன்றில், சீனச் சந்தையில் சிறந்ததாகச் செயல்பட்ட தொழில் நிறுவனங்கள், சர்வதேச அளவில் தங்கள் போட்டியாற்றலை அதிகரிக்கும் என்று தெரிவித்தார்.

மேலும், திறப்பு அளவை விரிவாக்கும் சீனா முழு உலகத்துடனும் வாய்ப்புகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறது. சீனாவில் வெளிநாட்டு முதலீட்டார்களுக்கு ஊக்கமளிக்கும் நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன. சீனாவிற்கான முதலீடு, எதிர்காலத்துக்கான முதலீடு என்பதை வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் நன்கு அறிந்து கொண்டுள்ளன.