வரும் 30 ஆண்டுகளில் மற்றொரு அற்புதத்தை ஆசிய-பசிபிக் பிரதேசம் எப்படி படைக்கும்?
2023-11-19 17:50:59

ஏபெக் தலைவர்களின் முதலாவது அதிகாரப்பூர்மற்றக் கூட்டம் இவ்வாண்டில் 30ஆவது ஆண்டு நிறைவை வரவேற்றது. நடப்பு நூற்றாண்டின் நடுப்பகுதிக்கு எத்தகைய ஆசிய-பசிபிக் பிரதேசத்தைக் கட்டமைக்க வேண்டும் என்பது பற்றியும், இப்பிரதேசத்தின் வளர்ச்சிக்கு எப்படி மற்றொரு பொற்காலத்தை உருவாக்க முடியும் என்பது பற்றியும் பலர் யோசிக்கின்றனர். அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோவில் 17ஆம் நாள் நடைபெற்ற ஏபெக் தலைவர்களின் அதிகாரப்பூர்வமற்ற கூட்டத்தில் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் இக்கேள்விகளுக்கு சீனாவின் பதில்களை அளித்தார். ஆசிய-பசிபிக் பிரதேசத்தின் உயர்தர வளர்ச்சியைக் கூட்டாக மேம்படுத்த வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்ததோடு, சீனா, தனது நவீனமயமாக்கத்தின் மூலம் உலகின் பல்வேறு நாடுகளின் நவீனமயமாக்கத்துக்கு புதிய வாய்ப்புகளை வழங்கும் என்றும் வாக்குறுதி அளித்தார்.

கடந்த 30 ஆண்டுகளில் ஆசிய-பசிபிக் பிரதேசத்தின் சராசரி சுங்க வரி 17 விழுக்காட்டிலிருந்து 5 விழுக்காடாகக் குறைந்துள்ளது. உலகப் பொருளாதார வளர்ச்சியில் இப்பிரதேசத்தின் பங்கு 70 விழுக்காட்டை எட்டியுள்ளது. மேலும் 100 கோடி மக்கள் வறுமையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இத்தகைய அற்புதத்துக்குப் பின் இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. முதலில், பிரதேசத்தின் முக்கிய பொருளாதார ஒத்துழைப்பு மன்றமான ஏபெக், கடந்த 30 ஆண்டுகளாக ஆசிய-பசிபிக் பொருளாதாரத்தின் ஒருமைப்பாட்டை ஊக்குவித்து, இப்பிரதேசம் உலகப் பொருளாதார வளர்ச்சியின் மையமாக மாறுவதற்குத் துணைபுரிந்துள்ளது. இரண்டாவதாக, பிரதேசப் பொருளாதார ஒத்துழைப்பை ஆழமாக்கி, ஆசிய-பசிபிக் பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றி, பிரதேசத்தின் மக்களுக்கு நன்மை புரிவது என்பது ஏபெக் அமைப்பின் ஆரம்பக் குறிக்கோளாகும்.

நடப்பு ஏபெக் உச்சிமாநாட்டில் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், ஆரம்பக் குறிக்கோளைக் கடைப்பிடித்து, ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்புடன் ஆசிய-பசிபிக் பிரதேசத்தின் உயர்தர வளர்ச்சியை கூட்டாக முன்னேற்ற வேண்டும் என்று முன்மொழிந்தார். இது ஏபெக் அமைப்பின் இலக்கிற்கும் கால ஓட்டத்துக்கும் பொருந்துவதுடன், பிரதேச மக்களின் பொது விருப்பத்தையும் வெளிப்படுத்தியுள்ளது.