சீன-பிலிப்பைன்ஸ் உறவின் இன்னலுக்கான மூலக்காரணம்
2023-12-22 11:49:15

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ டிசம்பர் 20ஆம் நாள் பிலிப்பைன்ஸ் வெளியுறவு அமைச்சர் என்ரிக் ஏ. மானலோவுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார். தென் சீனக் கடல் பிரச்சினையால் இரு நாட்டுறவு தேக்க நிலையில் சிக்கிக்கொண்டுள்ள பின்னணியில், இந்த தொலைபேசி தொடர்பு சர்வதேச சமூகத்தின் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. சீன-பிலிப்பைன்ஸ் உறவு ஏன் இன்னலை எதிர்கொண்டுள்ளது? அதற்கான மூலக்காரணத்தைக் கண்டறிய வேண்டும்.

கடந்த சில ஆண்டுகளில், இரு நாட்டுறவு பொதுவாக சீராக வளர்ந்து வந்துள்ளது. இவ்வாண்டின் துவக்கத்தில், பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவர் மார்க்கோசு சீனாவில் பயணம் மேற்கொண்ட போது, இரு தரப்புகளுக்கிடையே பல ஒத்த கருத்துக்கள் உருவாக்கப்பட்டன. நட்புக் கலந்தாய்வு வழிமுறை மூலம் கடல் சார் பிரச்சினைகளை உரிய முறையில் கையாள்வது அவற்றில் ஒன்று. இருப்பினும், இந்தப் ஒத்த கருத்துகள் பயனுள்ள முறையில் அமலுக்கு வரவில்லை. சீனாவுக்கான கொள்கையைப்  பிலிப்பைன்ஸ் மாற்றி தென் சீனக் கடலில் பிரச்சினைகளை உருவாக்கிப் பதற்ற நிலைமையைத் தீவிரமாக்கியது அதற்கான முக்கிய காரணமாகும்.  

சீனாவுக்கான கொள்கையை மாற்றி தென் சீனக் கடல் பிரச்சினையில் “அபாயமான செயல்களை” பிலிப்பைன்ஸ் மேற்கொள்வதற்கான காரணம் என்ன? இது பற்றி பார்வையாளர்கள் குறிப்பிடுகையில், ஒரு புறம், தென் சீனக் கடல் பிரச்சினை தொடர்பாக பிலிப்பைன்சில் வலுவான குரல் எப்போதும் நிலவியுள்ளது. எனவே வலுவான நிலைப்பாட்டை எடுப்பதன் மூலம் அந்நாட்டுத் தலைவர்கள்  தங்களுக்கான ஆதரவு விகிதத்தை உறுதி செய்ய எண்ணத்துடன் இருக்கிறார்கள். மறுபுறம், பாதுகாப்பு துறைகளில் அமெரிக்க-பிலிப்பைன்ஸ் ஒத்துழைப்பு மேம்படுத்தி வருவதுடன், வெளியுறவுக் கொள்கையில் பிலிப்பைன்ஸ் அமெரிக்காவுக்கு முன்னுரிமையைக் கொடுத்துள்ளது.

இந்த தொலைத் தொடர்பில், சீனாவுடன் பேச்சுவார்த்தையை வலுப்படுத்திக் கடல்சார் பிரச்சினைக்கான இரு தரப்புத் தொடர்பு முறைமையை நன்கு பயன்படுத்தி, பிரச்சினைக்கான தீர்வு கூட்டாக காண வேண்டும் என்று பிலிப்பைன்ஸ் தரப்பு விருப்பம் தெரிவித்தது.

பிலிப்பைன்ஸுடன் பேச்சுவார்த்தை மற்றும் தொடர்பு மேற்கொள்ளும் கதவைச் சீனா மூடாது. பிலிப்பைன்ஸ் சரியான பாதைக்குத் திரும்பி கருத்து வேறுபாடுகளைப் பேச்சுவார்த்தை மற்றும் கலந்தாய்வு மூலம் தீர்ப்பதற்கான வாக்குறுதியை நடைமுறைப்படுத்த வேண்டுமென சீனா விருப்பம் தெரிவித்துள்ளது.