எல்லை தாண்டி மீன்பிடித்த 25 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்
2024-07-02 17:14:29

இலங்கையின் கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடித்த 25 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இலங்கையின் வடக்கே, நெடுந்தீவு பகுதியில் எல்லை தாண்டி  மீன்பிடித்த இந்திய இழுவைப் படகுகள் மீதான சிறப்பு  ரோந்து  நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்திய மீனவர்களின் நான்கு மீன்பிடி படகுகளையும், கடற்படையினர் பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட படகுகள் மற்றும் மீனவர்கள் மீதான சட்ட நடவடிக்கைகளுக்காக உள்ளூர் அரசு நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட இருப்பதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

2024 ஆம் ஆண்டில் இதுவரை இலங்கை கடற்பரப்பில் 32 இந்திய மீன்பிடி படகுகள் மற்றும் 239 இந்திய மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் கடற்படை தெரிவித்துள்ளது.